தேசிய செய்திகள்

மகனின் 2 மாத குழந்தையை மாடியில் இருந்து தூக்கிவீசிய தாய்... காதல் திருமணம் செய்ததால் ஆத்திரம்

குழந்தைக்கு அடிக்கடி வலிப்பு ஏற்பட்டு வந்ததாக தெரிகிறது.

நகரி,

ஆந்திரபிரதேச மாநிலம் ஸ்ரீ சத்ய சாயி மாவட்டம் மாமிடாக்குலப் பள்ளியைச் சேர்ந்த தம்பதி அசோக்குமார்- பூஜிதா. இவர்கள் கடந்த ஆண்டு காதலித்து திருமணம் செய்து கொண்டனர். தற்போது அனந்தபுரத்தில் வசித்து வருகின்றனர். இவர்களுக்கு 2 மாதத்துக்கு முன்பு பெண் குழந்தை பிறந்தது.

அந்த குழந்தைக்கு அடிக்கடி வலிப்பு ஏற்பட்டு வந்ததாக தெரிகிறது. இதனால் அனந்தபுரம் அரசு ஆஸ்பத்திரியில் குழந்தையை சிகிச்சைக்காக சேர்த்து இருந்தனர். அசோக்குமாரின் தாயார் சத்தெம்மா, மகன் காதல் திருமணம் செய்ததில் விருப்பமின்றி இருந்தார். இதனால் அவர்களுடன் சரிவர பேசாமல் இருந்து வந்துள்ளார்.

இந்த நிலையில் அசோக்குமாரின் குழந்தையை பார்ப்பதற்காக சத்தெம்மா அரசு ஆஸ்பத்திரிக்கு வந்துள்ளார். அங்கு சத்தெம்மா திடீரென குழந்தையை எடுத்துச் சென்று 2-வது மாடியில் இருந்து கீழே வீசினார். குழந்தை அருகில் உள்ள கால்வாயில் கிடந்த காலி தண்ணீர் பாட்டில்கள் மீது விழுந்ததால் அதிர்ஷ்டவசமாக உயிர் தப்பியது.

தற்போது குழந்தைக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. ஆஸ்பத்திரி நிர்வாகத்தின் புகாரின் பேரில் சத்தெம்மா மற்றும் அசோக்குமாரிடம் போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர். இந்த சம்பவம் அப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.