பெங்களூரு,
கர்நாடக மாநிலம் முழுவதும் நேற்று 3,991 போலீஸ் பணியிடங்களுக்கான தேர்வு நடைபெற்றது. இந்த தேர்வுக்கு வரும் தேர்வர்களுக்கு கடுமையான கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டு இருந்தது. இந்த நிலையில், பெங்களூரு சி.கே.அச்சுக்கட்டு போலீஸ் எல்லைக்கு உட்பட்ட கிருஷ்ணா லே-அவுட்டில் உள்ள ஒரு தேர்வு மையத்துக்கு நேற்று காலையில் தேர்வு எழுத ஒரு பெண் வந்திருந்தார். அவர் தன்னுடன் 8 மாத குழந்தையையும் கொண்டு வந்திருந்தார்.
அவருடன் துணைக்கு யாரும் வரவில்லை. தேர்வு மையத்துக்குள் அவர் செல்ல இருந்த சந்தர்ப்பத்தில் அவரின் 8 மாத குழந்தை திடீரென்று அழ தொடங்கியது. உடனே தனது குழந்தையை தாய் சமாதானப்படுத்த முயன்றார். ஆனால் குழந்தை அழுதபடியே இருந்தது. இதை பார்த்த அங்கு பாதுகாப்பு பணியில் ஈடுபட்டு இருந்த சி.கே.அச்சுக்கட்டு போலீஸ் நிலைய பெண் போலீசார், அந்த தாயிடம் இருந்து குழந்தையை வாங்கினார்கள். பின்னர் அவரிடம் நீங்கள் கவலைப்படாமல் தேர்வு எழுதுங்கள், நாங்கள் குழந்தையை பார்த்து கொள்கிறோம் என்று கூறி 3 பெண் போலீசார் கூறினார்கள்.
தொட்டிலில் போட்டு தாலாட்டு
உடனே அவர்களிடம் குழந்தையை கொடுத்துவிட்டு அந்த தாய் தேர்வு எழுத சென்றார். பின்னர் தொடர்ந்து அழுதபடியே இருந்த குழந்தையை சமாதானப்படுத்த 3 போலீசாரும் முயன்றனர். மேலும் தேர்வு மைய வளாகத்தில் சேலையால் தொட்டில் கட்டி குழந்தையை போட்டு தாலாட்டினார்கள். இதனால் குழந்தை தூங்கியது. சிறிது நேரம் கழித்து விழித்த குழந்தையை 3 போலீசாரும் தூக்கி கொஞ்சி மகிழ்ந்தனர். குழந்தையை பத்திரமாக பார்த்து கொண்டனர்.
பாதுகாப்பு பணியில் ஈடுபட்டபடியே குழந்தையையும் கவனித்து கொண்டனர். பின்னர் தேர்வு எழுதி விட்டு வந்து குழந்தையை போலீசாரிடம் இருந்து தாய் வாங்கி சென்றார். குழந்தையை பெண் போலீசார் தொட்டிலில் போட்டு தாலாட்டுவது, கொஞ்சி மகிழும் வீடியோ காட்சிகள் சமூக வலைதளங்களில் பரவி வருகிறது. அந்த போலீசாருக்கு பாராட்டுகள் குவிந்த வண்ணம் உள்ளது.