டேராடூன்,
உத்தரகாண்டில் காட்டாற்று வெள்ளத்தில் அடித்துச் செல்லப்பட்ட வாகன ஓட்டி ஒருவரை பொதுமக்கள் பத்திரமாக மீட்டனர்.
உத்தரகாண்ட் மாநிலத்தின் பல்வேறு பகுதிகளில் கடந்த சில தினங்களாக கனமழை பெய்து வருகிறது. இதனால் அங்குள்ள ஓடைகள் மற்றும் ஆறுகளில் திடீரென வெள்ளப்பெருக்கு ஏற்பட்டது. இந்நிலையில், விகாஸ்நகர் பகுதிக்கு உட்பட்ட கடாபத்தர் பகுதியில் வெள்ளம் சூழ்ந்த சாலையை ஒரு நபர் பைக்கில் கடக்க முயன்றார்.
அங்கு நின்றிருந்த பொதுமக்கள், தண்ணீரின் வேகம் அதிகமாக இருப்பதால் அச்சாலையைக் கடக்க வேண்டாம் என அவரை சத்தமிட்டு எச்சரித்துள்ளனர். ஆனால், பொதுமக்களின் எச்சரிக்கையை அலட்சியம் செய்துவிட்டு அவர் வெள்ளத்தில் இறங்கினார்.
வெள்ள நீர் நிரம்பி வழிந்த சாலையின் நடுவே சென்றபோது, நீரின் கடுமையான வேகம் காரணமாக அவர் கட்டுப்பாட்டை இழந்தார். கண் இமைக்கும் நேரத்தில், பைக்குடன் அவர் வெள்ளத்தில் அடித்துச் செல்லப்பட்டார்.
வாகன ஓட்டி வெள்ளத்தில் அடித்துச் செல்லப்படுவதைக் கண்ட உள்ளூர் மக்கள் உடனடியாக மீட்பு நடவடிக்கையில் இறங்கினர். ஆற்றில் குதித்து துரிதமாகவும் துணிச்சலாகவும் செயல்பட்ட அவர்கள், சீறிப்பாய்ந்த வெள்ளத்தில் இருந்து அந்த நபரை உயிருடன் பத்திரமாக மீட்டனர். அதிர்ஷ்டவசமாக அவருக்கு பெரிய அளவில் எந்த காயமும் ஏற்படவில்லை.
அந்த நபர் வெள்ளத்தில் அடித்துச் செல்லப்பட்ட பதைபதைக்கும் காட்சியை அங்கிருந்த ஒருவரின் மொபைல் போனில் வீடியோவாகப் பதிவு செய்தார். இந்த வீடியோ சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது.
இச்சம்பவத்தைத் தொடர்ந்து, பருவமழை தீவிரமடைந்துள்ளதால் பொதுமக்கள் யாரும் ஆபத்தான நீர்நிலைகளைக் கடக்க வேண்டாம் என அரசு நிர்வாகம் மீண்டும் எச்சரித்துள்ளது. பார்ப்பதற்கு ஆழம் குறைவாகத் தெரிந்தாலும், மலைப்பகுதிகளின் காட்டாற்று வெள்ளத்திற்கு வாகனங்களையே அடித்துச் செல்லும் வேகம் இருக்கும் என்பதால் விழிப்புணர்வுடன் இருக்குமாறு அறிவுறுத்தப்பட்டுள்ளது.