சிவ்புரி,
மத்திய பிரதேசத்தின் சிவ்புரி மாவட்டத்தில் வீரா கிராமத்தில் வசித்து வந்த சகோதர, சகோதரிகள் 3 பேர் மோட்டார் சைக்கிளில் மகுவார் பாலத்தின் மீது சென்றுள்ளனர்.
அப்போது, சிறிய ரக சரக்கு ஆட்டோ ஒன்று தவறான திசையில் அவர்களை நோக்கி வந்துள்ளது. இதில், இவர்களுடைய மோட்டார் சைக்கிள் மீது ஆட்டோ மோதி விபத்து ஏற்பட்டதில் 3 பேரும் படுகாயமடைந்தனர்.
இந்த விபத்தில் அங்கித் ராய் (வயது 28), சத்யம் ராய் இருவரும் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தனர். அவர்களுடைய சகோதரி வைஷ்ணவி (வயது 18) அருகேயுள்ள மருத்துவமனைக்கு சிகிச்சைக்காக கொண்டு செல்லப்பட்டார். இதன்பின்னர் குவாலியருக்கு உயர் சிகிச்சைக்காக கொண்டு செல்லப்பட்டார். எனினும், வழியிலேயே அவர் உயிரிழந்து விட்டார்.
இவர்கள் 3 பேரும் உத்தர பிரதேசத்தின் ஜான்சி நகரில் உள்ள பல்லாம்பூர் பகுதிக்கு சென்றனர். அப்போது நடந்த இந்த விபத்தில் சகோதர, சகோதரிகள் 3 பேரும் பலியாகி உள்ளனர்.