கேரளாவில் சமீபத்தில் பெய்த பலத்த மழையால் பெரும் சேதம் விளைந்த நிலையில், முல்லைப்பெரியாறு அணைக்கு மிகுந்த பாதிப்பு ஏற்பட்டிருப்பதாகவும், அது ஆபத்தான நிலையில் இருப்பதாகவும் தகவல்கள் பரபரப்பட்டு வருகின்றன. இந்த அணை உடைந்தால் லட்சக்கணக்கான மக்கள் உயிரிழக்க நேரிடும் என சினிமா பிரபலங்கள் உள்பட பலரும் சமூக வலைத்தளங்களில் பரப்பி வருகின்றனர். இதனால் அணைக்கு அருகே வாழும் மக்கள் பெருத்த பீதியில் இருப்பதாக மாநில சட்டசபையில் எதிர்க்கட்சி தலைவர் நேற்று தெரிவித்தார்.
இதற்கு முதல்-மந்திரி பினராயி விஜயன் பதில் அளிக்கையில், முல்லைப்பெரியாறு அணை ஆபத்தான நிலையில் இருப்பதாகவும், லட்சக்கணக்கான மக்கள் சாகப்போகிறார்கள் எனவும் சிலர் சமூக வலைத்தளங்களில் தவறான தகவல்களை பரப்பி வருகின்றனர். தற்போதைய நிலையில் அப்படி ஒரு ஆபத்தான சூழல் இல்லை. எனவே இத்தகைய தவறான தகவல்களை பரப்புவோர் மீது சட்ட நடவடிக்கை எடுக்கப்படும் என எச்சரித்தார்.
முல்லைப்பெரியாறு விவகாரத்தில் அனைத்து பிரச்சினைகளிலும் தமிழக அரசு கேரளாவுடன் சிறப்பாக ஒத்துழைப்பு வழங்கி வருவதாக கூறிய பினராயி விஜயன், சில அம்சங்களில் மட்டும் இரு மாநிலங்களுக்கு இடையே லேசான கருத்து வேறுபாடுகள் இருப்பதாகவும், அவை பேச்சுவார்த்தை மூலம் தீர்வு காணப்பட வேண்டும் எனவும் தெரிவித்தார்.