தேசிய செய்திகள்

மும்பையில் ஐகோர்ட்டு பெண் நீதிபதியின் கிரெடிட் கார்டை பயன்படுத்தி ரூ.6.2 லட்சம் மோசடி

போலீசார் வழக்குப்பதிவு செய்து மோசடி ஆசாமிகளின் வங்கி கணக்கு, செல்போன் விவரங்களை கண்டறிந்தனர்.

மும்பை,

மும்பை ஐகோர்ட்டு பெண் நீதிபதி ஒருவர் சமீபத்தில் அவரது கிரெடிட் கார்டு பாயிண்டுகளை 'ரெடீம்' செய்ய விரும்பினார். எனவே அவர் தனியார் வங்கியின் வாடிக்கையாளர் உதவி எண்ணை தொடர்பு கொண்டார். ஆனால் அந்த எண்ணில் அவரால் வங்கி ஊழியரை தொடர்பு கொள்ள முடியவில்லை. இதையடுத்து அவர் ஆன்லைனில் கிடைத்த தனியார் வங்கியின் வாடிக்கையாளர் உதவி எண்ணை தொடர்பு கொண்டு பேசினார்.

அதில் பேசிய நபர் பெண் நீதிபதிக்கு ஒரு லிங்கை அனுப்பி அதில் உள்ள விவரங்களை பூர்த்தி செய்தால் கிரெடிட் கார்டு பாயிண்டுகள் 'ரெடீம்' செய்யப்படும் என கூறினார். இதை நம்பிய பெண் நீதிபதி அதை பதிவிறக்கம் செய்து தனது கிரெடிட் கார்டு தகவல்களை பூர்த்தி செய்தார்.

அதன்பிறகு அவரது கிரெடிட் கார்டை பயன்படுத்தி ரூ.6 லட்சத்து 2 ஆயிரம் மோசடி செய்யப்பட்டது தெரியவந்தது. இதனால் அதிர்ச்சி அடைந்த பெண் நீதிபதி உடனடியாக அவரது கிரெடிட் கார்டை பிளாக் செய்தார்.

மேலும் இந்த மோசடி குறித்து சைபர் போலீசில் புகார் அளித்தார். போலீசார் வழக்குப்பதிவு செய்து மோசடி ஆசாமிகளின் வங்கி கணக்கு, செல்போன் விவரங்களை கண்டறிந்தனர். மேலும் அவர்களை கைது செய்ய நடவடிக்கை எடுத்து வருகின்றனர். சைபர் மோசடி கும்பலின் வலையில் சிக்கி ஐகோர்ட்டு நீதிபதி ஒருவரே ரூ.6.2 லட்சத்தை இழந்த சம்பவம் பொதுமக்கள் இடையே அதிர்ச்சியை ஏற்ப டுத்தி உள்ளது.