மும்பை,
மும்பையில் ரூ.5,000 கோடிக்கும் அதிக சொத்து மதிப்பு கொண்ட கோடீஸ்வர பா.ஜ.க. எம்.எல்.ஏ. ஒருவர், திடீரென கிழிந்த ஆடைகளுடன் தெருவில் இறங்கி பிச்சை எடுத்த விசித்திர சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
மராட்டிய மாநிலத்தின் மிக முக்கிய கோடீஸ்வர அரசியல்வாதிகளில் ஒருவர் பராக் ஷா. இவர் மும்பை காட்கோபர் கிழக்கு தொகுதி பா.ஜ.க. எம்.எல்.ஏ. ஆவார். தொழிலதிபரான இவருக்கு பல ஆயிரம் கோடி ரூபாய் மதிப்பிலான சொத்துக்கள் உள்ளன.
இவ்வளவு ஆடம்பர வசதிகள் இருந்தும், அவர் ஏன் பிச்சைக்காரராக மாறினார் என்ற கேள்வி அனைவர் மத்தியிலும் எழுந்தது. ஜெயின் சமூகத்தை சேர்ந்த பராக் ஷா, தங்களது புனித கால வழிபாட்டின் போது தனது ஆன்மீக குருவான நம்ரமுனி மகாராஜை சந்தித்து ஆசி பெற்றார். அப்போது அவரது குரு, "வாழ்க்கையின் எதார்த்த நிலையையும், ஏழை மக்களின் கஷ்டங்களையும், மனிதர்களின் உண்மை முகத்தையும் நேரில் உணர்ந்து கொள்ள வேண்டும்" என்று அறிவுறுத்தினார்.
குருவின் கட்டளையை ஏற்று, தன் வசம் இருந்த சொகுசு கார்கள், துப்பாக்கி ஏந்திய பாதுகாவலர்கள், விலை உயர்ந்த ஆடைகள் என அனைத்தையும் ஒரு நாள் முழுவதும் துறக்க அவர் முடிவு செய்தார்.
இதையடுத்து, மக்கள் யாரும் தன்னை அடையாளம் கண்டு கொள்ள கூடாது என்பதற்காக, முகத்தில் அழுக்குகளை பூசி, கிழிந்த ஆடைகளை அணிந்து கொண்டு பராக் ஷா மும்பை காட்கோபர் வீதிகளில் பிச்சைக்காரராக வலம் வந்தார். வீதியோரம் அமர்ந்து கையேந்தி யாசகம் பெற்றார்.
சொந்த செக்யூரிட்டியே விரட்டினார் இந்த ஒரு நாள் பிச்சைக்கார வாழ்க்கையில் அவருக்கு பல அதிர்ச்சிகரமான அனுபவங்கள் கிடைத்தன. இதுகுறித்து அவர் நெகிழ்ச்சியுடன் கூறியதாவது:-
"நான் பிச்சைக்காரர் வேடத்தில் என் சொந்த அலுவலக குடியிருப்பு வளாகத்திற்குள் சென்றபோது, அங்கு வேலை பார்க்கும் எனது சொந்த செக்யூரிட்டியே என்னை அடையாளம் தெரியாமல் கழுத்தை பிடித்து வெளியே தள்ளினார்.
எப்போதும் எனக்கு உதவி செய்யும் நெருங்கிய நண்பர் ஒருவரிடம் கையேந்தி நின்றேன். ஆனால், அவரோ என்னை அடையாளம் காணாமல் திட்டி விரட்டினார். அதே நேரத்தில் மும்பை வீதியில் சில இளைஞர்கள் என் நிலையை கண்டு பரிதாபப்பட்டு உணவு சாப்பிட 20 ரூபாய் பணம் கொடுத்தார்கள். அங்குள்ள ஒரு சமோசா வியாபாரி எவ்வித பாகுபாடும் காட்டாமல் எனக்கு இலவசமாக சமோசா கொடுத்து உபசரித்தார்."
பணம், பதவி, புகழ் ஆகியவை மனிதனுக்குள் தலைக்கணத்தை உண்டாக்கி விடுகின்றன. இந்த அனுபவம் என் அகந்தையை முற்றிலும் அழித்துவிட்டது. முன்பு என்னை சந்திக்க பல மணி நேரம் காத்திருந்தவர்கள், நான் தகுதியை இழந்த ஏழையாக நின்றபோது என்னை விட உயர்ந்தவர்களாக நினைத்து என்னை விரட்டினர்.
இந்த சமோசா வியாபாரி போன்ற எளிய மனிதர்களிடம் தான் உண்மையான அன்பு இருக்கிறது. இந்த சமூகம் மனிதர்களை மதிப்பதில்லை, அவரிடம் இருக்கும் பணம் மற்றும் பதவியை மட்டும்தான் மதிக்கிறது என்பதை இந்த ஒரு நாள் பிச்சைக்கார வாழ்க்கை எனக்குப் புரிய வைத்துள்ளது" என்று உருக்கமாகத் தெரிவித்தார்.
கோடீஸ்வர எம்.எல்.ஏ. ஒருவர் பிச்சைக்காரராக மாறிய செய்தி தற்போது சமூக வலைதளங்களில் காட்டுத்தீ போல பரவி, பொதுமக்கள் மத்தியில் பெரும் நெகிழ்ச்சியையும் வியப்பையும் ஏற்படுத்தி வருகிறது.