மும்பை கமிஷனர் ஹேமந்த் நக்ராலே; பரம்பீர் சிங் 
தேசிய செய்திகள்

விசாரணையை தவறாக வழிநடத்தியதாக புகார்; அம்பானி வீட்டு அருகே வெடிகுண்டு கார் விவகாரத்தில் மும்பை போலீஸ் கமிஷனர் அதிரடி மாற்றம்; புதிய கமிஷனர் ஹேமந்த் நக்ராலே

முகேஷ் அம்பானி வீட்டு அருகே வெடிகுண்டு கார் நின்ற வழக்கு விசாரணையை தவறாக வழிநடத்திய புகாரில் மும்பை போலீஸ் கமிஷனர் பரம்பீர் சிங் அதிரடியாக மாற்றப்பட்டார். புதிய கமிஷனராக ஹேமந்த் நக்ராலே நியமிக்கப்பட்டு உள்ளார்.

தினத்தந்தி

பிரபல தொழில் அதிபரான ரிலையன்ஸ் குழும தலைவர் முகேஷ் அம்பானியின் மும்பை வீட்டு அருகே கடந்த மாதம் 25-ந் தேதி சந்தேகத்துக்கு இடமாக கார் ஒன்று நிறுத்தப்பட்டு இருந்தது.

வெடிகுண்டு கார்

அந்த காரில் சோதனை நடத்தியதில் 20 ஜெலட்டின் குச்சிகள் சிக்கின. மேலும் முகேஷ் அம்பானி மற்றும் அவரது மனைவிக்கும் மிரட்டல் விடுக்கும் கடிதமும் சிக்கியது.இந்த வழக்கில் மர்ம முடிச்சு அவிழும் முன் வெடிகுண்டுடன் சிக்கிய காரின் உரிமையாளர் என கருதப்படும் தானேயை சேர்ந்த ஆட்டோ உதிரிபாக வினயோகஸ்தர் ஹிரன் மன்சுக்(வயது48) கடந்த 5-ந் தேதி பிணமாக மீட்கப்பட்டார். அவர் கொலை செய்யப்பட்டது தெரியவந்ததால் வழக்கில் புதிய சர்ச்சை ஏற்பட்டது.

உதவி இன்ஸ்பெக்டர் கைது

இந்தநிலையில் முகேஷ் அம்பானி வீட்டு அருகே வெடிகுண்டு சிக்கிய வழக்கை மத்திய உள்துறை அமைச்சகத்தின் உத்தரவின்பேரில் தேசிய புலனாய்வு முகமை (என்.ஐ.ஏ.) விசாரணைக்கு ஏற்றது. இதையடுத்து கடந்த 13-ந் தேதி மும்பை குற்ற புலனாய்வு பிரிவில் உதவி இன்ஸ்பெக்டராக பணியாற்றி வந்த சச்சின் வாசே என்ற அதிகாரியை என்.ஐ.ஏ. அதிரடியாக கைது செய்தது.அவரது அலுவலகத்தில் சோதனை நடத்தியதில் வழக்கு விசாரணைக்கு தேவையான முக்கிய ஆவணங்கள் சிக்கின. மேலும் சி.எஸ்.எம்.டி. ரெயில் நிலையம் அருகே நிறுத்தி வைக்கப்பட்டு இருந்த கைதான சச்சின் வாசேக்கு சொந்தமான கார் ஒன்றை என்.ஐ.ஏ. அதிகாரிகள் பறிமுதல் செய்தனர். அந்த காரில் இருந்து ரூ.5 லட்சம் ரொக்கம், பணம் எண்ணும் எந்திரம் மற்றும் சில துணிகளையும் கைப்பற்றினர்.

அம்பானி வீட்டு அருகே நின்ற வெடிகுண்டு கார், அங்கு செல்லும் போது அதன் பின்னால் சச்சின் வாசேயின் கார் சென்று உள்ளது. மேலும் இந்த காரை சச்சின் வாசேயே ஓட்டியுள்ளார். இதுதவிர வெடிகுண்டுடன் காரை நிறுத்திய டிரைவரை இவர் தனது காரில் ஏற்றிக்கொண்ட அதிர்ச்சி தகவலும் விசாரணையில் வெளிச்சமாகி உள்ளது.

போலீஸ் கமிஷனர் மீது புகார்

ஆனால் என்.ஐ.ஏ. வழக்கை கையில் எடுக்கும் வரை, மும்பை போலீசார் வழக்கை திசை திருப்பி வந்ததாக கூறப்படுகிறது. வழக்கை தவறாக கையாண்ட விதம் தொடர்பாக மும்பை போலீஸ் கமிஷனர் பரம்பீர் சிங் மீது அரசு அதிருப்தி அடைந்தது. இது தொடர்பாக முதல்-மந்திரி உத்தவ் தாக்கரேவை, தேசியவாத காங்கிரஸ் தலைவர் சரத்பவார் சந்தித்து பேசினார். இதனால் இந்த வழக்கு அரசியல் பரபரப்பையும் ஏற்படுத்தியது.

இந்தநிலையில் நேற்று முன்தினம் இரவு போலீஸ் கமிஷனர் பரம்பீர் சிங்கை முதல்-மந்திரி உத்தவ் தாக்கரே நேரில் அழைத்து விசாரித்தார்.

ஊர்க்காவல் படைக்கு மாற்றம்

இதையடுத்து அதிரடி நடவடிக்கையாக நேற்று மும்பை போலீஸ் கமிஷனர் பரம்பீர் சிங் ஊர்க்காவல் படை டி.ஜி.பி.யாக மாற்றப்பட்டார். மாநில போலீஸ் வட்டாரத்தில், இது தண்டனைக்குரிய பதவியாக கருதப்படுகிறது.

மும்பை புதிய போலீஸ் கமிஷனராக மாநில போலீஸ் டி.ஜி.பி. பொறுப்பில் இருக்கும் ஹேமந்த் நக்ராலே நியமிக்கப்பட்டார். புதிய டி.ஜி.பி. பொறுப்பு ரஜ்னிஸ் சேத்துக்கு கூடுதலாக வழங்கப்பட்டது.இந்த இடமாற்ற அறிவிப்பை மாநில உள்துறை மந்திரி அனில் தேஷ்முக் டுவிட்டர் பதிவில் வெளியிட்டு உள்ளார்.

முழு சதி வெளிவரும்

இதற்கிடையே வெடிகுண்டு விவகாரத்தில் தொடர்புடைய மற்றவர்கள் குறித்து விசாரணை நடந்து வருவதாகவும், விரைவில் முழு சதியும் வெளிவரும் என்றும் என்.ஐ.ஏ. வட்டாரங்கள் தெரிவித்து உள்ளன. கைதான போலீஸ் அதிகாரி சிவசேனா தொண்டர் என்ற தகவலும் வெளியானது. ஆனால் சில ஆண்டுகளாக அவர் தனது உறுப்பினர் பதவியை புதுப்பிக்கவில்லை என்பதால், அவர் தங்களது கட்சி தொண்டர் அல்ல சிவசேனா கூறி உள்ளது.

வெடிகுண்டு கார் விவகாரத்தில் மராட்டிய உள்துறைக்கு தொடர்பு இருப்பதை என்.ஐ.ஏ. விரைவில் வெளிச்சத்துக்கு கொண்டு வரும் என்று பா.ஜனதா மூத்த தலைவரும், மேல்-சபை எதிர்க்கட்சி தலைவருமான பிரவின் தரேக்கர் கூறியுள்ளார். மொத்தத்தில் முகேஷ் அம்பானி வீட்டு அருகே வெடிகுண்டு கார் சிக்கிய வழக்கு அரசியல் பரபரப்பையும் ஏற்படுத்தி உள்ளது.

அஜித்பவார் உடலுக்கு இன்று இறுதிச் சடங்கு: பிரதமர் மோடி உள்ளிட்ட தலைவர்கள் பங்கேற்பு

அஜித்பவார் மரணம் ஒரு விபத்து; இதை அரசியலாக்க கூடாது: சரத்பவார்

அனில் அம்பானியின் ரூ.1,800 கோடி சொத்துகள் முடக்கம்; அமலாக்கத்துறை நடவடிக்கை

அஜித்பவார் மறைவால் மகாயுதி அரசுக்கு ஆபத்தா?

விமான விபத்தில் கடைசி நிமிடங்களில் நடந்தது என்ன? பரபரப்பு தகவல்கள்