மும்பை
மும்பையில் ரூ.5.47 கோடி மதிப்பிலான கடத்தல் தங்கம் பறிமுதல் செய்யப்பட்டது.
மராட்டியத்தின் மும்பை நகரில் சத்ரபதி சிவாஜி மகராஜ் சர்வதேச விமான நிலையத்தில் தங்கம் கடத்தி கொண்டு வரப்படுகிறது என கிடைத்த ரகசிய தகவலை தொடர்ந்து, மும்பை மண்டல பிரிவை சேர்ந்த வருவாய் புலனாய்வு இயக்குநரகத்தின் அதிகாரிகள் தீவிர விசாரணையில் இறங்கினர்.
அப்போது, விமான நிலைய பணியாளர் ஒருவர் தங்கத்தூளை 3 கேப்சூல்களில் மறைத்து, மெழுகில் வைத்து கடத்திக்கொண்டு சென்றது தெரிய வந்தது. விமான நிலையத்தில் இருந்து 50 கி.மீ. தொலைவுக்கு அவரை பின்தொடர்ந்து சென்ற அதிகாரிகள் அவரை பிடித்து, அவற்றை பறிமுதல் செய்தனர்.
அவரிடம் நடத்திய விசாரணையில், மற்றொரு பெண் விமான பணியாளர் ஒருவரும் இதற்கு உதவியாக செயல்பட்டது தெரிய வந்துள்ளது. அவரை பிடித்து விசாரித்ததில், மஸ்கட் மற்றும் துபாயில் இருந்து வந்த 2 பயணிகள் இந்த கடத்தலில் ஈடுபட்ட விவரம் தெரிய வந்தது.
இதுதொடர்பாக 8 கேப்சூல்களில் மறைத்து, கடத்தப்பட்ட மொத்தம் 3.47 கிலோ எடை கொண்ட தங்கத்தூள் கைப்பற்றப்பட்டது. அவற்றின் மதிப்பு ரூ.5.47 கோடியாகும். 2 பயணிகள், 2 விமான நிலைய பணியாளர்கள் என மொத்தம் 4 பேர் கைது செய்யப்பட்டனர்.