தேசிய செய்திகள்

போர் ஹெலிகாப்டரில் பயணம் செய்த திரவுபதி முர்மு

போர் ஹெலிகாப்டரில் பயணம் செய்த முதல் இந்திய ஜனாதிபதி என்ற பெருமையை திரவுபதி முர்மு பெற்றுள்ளார்.

ஜெய்ப்பூர்,

ஜனாதிபதி திரவுபதி முர்மு 2 நாள் பயணமாக ராஜஸ்தான் சென்றுள்ளார். இந்தநிலையில், ஜெய்சால்மர் விமானப்படை நிலையத்தில், உள்நாட்டிலேயே தயாரிக்கப்பட்ட இலகுரக போர் ஹெலிகாப்டர் (LCH) 'பிரசாந்த்'-இல் பயணம் செய்தார்.

ஆலிவ்-பச்சை நிற பறக்கும் உடை மற்றும் தலைக்கவசம் அணிந்த ஜனாதிபதி திரவுபதி முர்மு இந்தியா-பாகிஸ்தான் எல்லைக்கு அருகில் உள்ள 'பிரசாந்த்' என்ற லைட் காம்பாட் ஹெலிகாப்டரில் துணை விமானியாக சுமார் 25 நிமிடங்கள் பறந்தார்.

முன்னதாக ஹெலிகாப்டரில் பயணம் செய்தவற்கு முன் ஜனாதிபதி முர்மு கூறுகையில்,

பிரசாந்த் ஹெலிகாப்டர் தன்னம்பிக்கையின் சக்திவாய்ந்த சின்னம். இந்த நேரத்தில், நான் ஜெய்சால்மர் மாவட்டத்தின் மீது பறக்கிறேன். நமது துணிச்சலான வீரர்களுக்கு எனது மனமார்ந்த வாழ்த்துக்களையும் ஆழ்ந்த நன்றியையும் தெரிவித்துக் கொள்கிறேன். உங்களுக்கு அன்பான வணக்கம், ஜெய் ஹிந்த், ஜெய் பாரத் என்றார்.

இதன்மூலம், போர் ஹெலிகாப்டரில் பயணம் செய்த முதல் இந்திய ஜனாதிபதி என்ற பெருமையை திரவுபதி முர்மு பெற்றுள்ளார். கடந்த ஆண்டு அக்டோபரில் அம்பாலாவில் உள்ள விமானப்படை நிலையத்தில் ரபேல் போர் விமானத்தில் பறந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.

LCH 'பிரசாந்த்' என்பது இந்தியாவின் முதல் உள்நாட்டிலேயே வடிவமைக்கப்பட்டு உருவாக்கப்பட்ட போர் ஹெலிகாப்டர் ஆகும். இது இந்துஸ்தான் ஏரோநாட்டிக்ஸ் லிமிடெட் (HAL) நிறுவனத்தால் தயாரிக்கப்பட்டது. இந்த ஹெலிகாப்டர் பாலைவனங்கள் முதல் உயரமான பகுதிகள் வரை பல்வேறு நிலப்பரப்புகளில் இயங்கும் வகையில் வடிவமைக்கப்பட்டுள்ளது.