லக்னோ,
உத்தர பிரதேசத்தில் பிரதான கட்சியான சமாஜ்வாடி கட்சியின் மூத்த தலைவர்களில் ஒருவர் ஆசம் கான். சர்ச்சைக்குரிய கருத்துக்களை அவ்வப்போது பேசி சிக்கலில் மாட்டிக்கொள்வது இவரது வழக்கம். நேற்று ராம்பூரில் சமாஜ்வாடி கட்சி நிர்வாகிகள் கூட்டம் நடைபெற்றது. இதில் பேசிய ஆசம் கான் ராணுவ வீரர்கள் குறித்து சர்ச்சைக்குரிய வகையில் பேசியது பெரும் கொந்தளிப்பை ஏற்படுத்தியது.
ஆசம் கான் கூறியதாவது:- ஜம்மு-காஷ்மீர், திரிபுரா, ஜார்க்கண்ட், மேற்கு வங்கம் ஆகிய மாநிலங்களில் பெண்களிடம் இந்திய ராணுவத்தினர் பாலியல் வன்முறைகளில் ஈடுபட்டு வருகின்றனர். இதனால், சில நேரங்களில் ராணுவ வீரர்களின் பிறப்புறுப்புகளை துண்டிக்க வேண்டிய நிலைக்கு அங்குள்ள பெண்கள் தள்ளப்படுகிறார்கள். எனப் பேசியதாகத் தெரிகிறது. ஆசம்கானின் இந்தக் கருத்தானது சமூக வலைதளங்களில் வேகமாகப் பரவியதால் பெரும் பரபரப்பு ஏற்பட்டது.
இந்திய ராணுவத்தினர் குறித்து தரம் தாழ்ந்த கருத்துகளைக் கூறிய ஆசம் கானை சமாஜ்வாடி கட்சியிலிருந்து நீக்க வேண்டும் என்று பாஜக வலியுறுத்தியுள்ளது. இந்த நிலையில், தனது கருத்தை ஊடகங்கள் தவறாக திரித்துவிட்டதாக ஆசம் கான் விளக்கம் அளித்துள்ளார். இது குறித்து ஆசம் கான் கூறுகையில், எனது கருத்து ஊடகங்கள் திரித்து வெளியிட்டு இருக்கின்றன. என்னால் எப்படி ராணுவத்தின் சுயமரியாதைக்கு களங்கம் ஏற்படும். நான் ஒரு சதாரணமானவன். பிரதமர் மோடி பாகிஸ்தானுக்கு சென்ற போது ராணுவத்தின் சுயமரியாதைக்கு பாதிப்பு ஏற்பட்டது என்று தெரிவித்துள்ளார்.