புதுடெல்லி,
இந்தியாவின் முக்கிய அண்டை நாடுகளில் ஒன்றான மியான்மரில் சமீபத்தில் நடந்த நாடாளுமன்ற தேர்தலில் வெற்றி பெற்று யு மின் ஆங் ஹிலெய்ங் புதிய அதிபராக பதவியேற்றார். மியான்மர் தொடர்ந்து இந்தியாவுடன் சிறந்த நட்பை பேணி வரும் நிலையில், அதிபர் யு மின் 5 நாள் பயணமாக நேற்று இந்தியா வந்தார்.
பீகாரின் கயா வந்தடைந்த அவர், அங்குள்ள மகாபோதி ஆலயத்தில் தரிசனம் செய்து விட்டு, மாலையில் டெல்லி சென்றார். அவருடன் மந்திரிகள் உள்ளிட்ட உயர்மட்டக்குழுவும் இந்தியா வந்துள்ளது. டெல்லியில் பிரதமர் மோடியை நாளை (திங்கட்கிழமை) சந்தித்து பேசும் யு மின், இருதரப்பு வரலாற்று, கலாசார உறவுகளை மேலும் வலுப்படுத்துவது குறித்து ஆலோசனை நடத்துகிறார். மேலும் வர்த்தக நிகழ்ச்சி ஒன்றிலும் அவர் பங்கேற்பார் என வெளியுறவுத்துறை அமைச்சகம் தெரிவித்து உள்ளது.
பின்னர் 2-ந்தேதி மும்பை செல்லும் மியான்மர் அதிபர். அங்கு தொழில்துறை தலைவர்களுடன் கலந்துரையாடல் நடத்துகிறார். பின்னர் அங்கு பல்வேறு நிகழ்வுகளிலும் பங்கேற்பார் என மத்திய அரசு கூறியுள்ளது.