புதுடெல்லி,
நாடாளுமன்ற தேர்தல் மற்றும் இடைத்தேர்தலில் சீமானின் நாம் தமிழர் கட்சி தனித்து போட்டியிடுகிறது. இந்த கட்சிக்கு தேர்தல் கமிஷன் கரும்பு விவசாயி சின்னத்தை ஒதுக்கியது. வேட்பாளர்களின் பெயர்கள் மற்றும் சின்னங்கள் வாக்குப்பதிவு எந்திரத்தில் ஒட்டப்பட்டன.
இதையடுத்து, சின்னங்கள் ஒட்டப்பட்டதில் கரும்பு விவசாயி சின்னம் தெளிவாக இல்லை என்று அந்த கட்சி சார்பில் தேர்தல் கமிஷனில் புகார் செய்யப்பட்டது. இதனைத் தொடர்ந்து அக்கட்சியின் பொதுச்செயலாளர் என்.சந்திரசேகரன் சுப்ரீம் கோர்ட்டில் மனு ஒன்றை தாக்கல் செய்தார்.
மேலும் தேர்தல் நெருங்கி விட்டதால் இந்த வழக்கை அவசர வழக்காக விசாரிக்க வேண்டும் என்று நேற்று சுப்ரீம் கோர்ட்டில் அவர் தரப்பில் முறையிடப்பட்டது. அப்போது இந்த வழக்கை விசாரித்த நீதிபதிகள், இதை அவசர வழக்காக விசாரிக்க வேண்டிய அவசியம் இல்லை என்று கூறி, மனுதாரரின் கோரிக்கையை நிராகரித்தனர்.