புதுடெல்லி,
அடுத்த ஆண்டு (2027) முதல் நடைமுறைப்படுத்த உள்ள 'நீட்' கணினி வழித் தேர்வை 6 நாட்களுக்கு மேல் நடத்த திட்டமிடப்பட்டு வருகின்றன.
மருத்துவப்படிப்புகளில் சேருவதற்கு நீட் நுழைவுத்தேர்வு மதிப்பெண் கட்டாயம். அந்த வகையில் இந்த தேர்வை சுமார் 20 லட்சத்துக்கும் மேற்பட்ட மாணவ-மாணவிகள் எழுதுகிறார்கள். நாடு முழுவதும் உள்ள 1 லட்சத்து ஆயிரத்துக்கும் மேற்பட்ட எம்.பி.பி.எஸ். இடங்கள் இந்த மதிப்பெண்கள் வாயிலாகவே நிரப்பப்படுகின்றன. அதேபோல், பி.டி.எஸ்., ஆயுர்வேதம், யுனானி மற்றும் சித்தா ஆகிய இளநிலை படிப்புகளுக்கான சேர்க்கைக்கும் 'நீட்' தேர்வு மதிப்பெண்ணே கணக்கில் கொள்ளப்படுகிறது. அந்த வகையில் 2026-ம் ஆண்டுக்கான 'நீட்' தேர்வு கடந்த மே மாதம் 3-ந்தேதி நடந்த நிலையில், அந்த தேர்வில் வினாத்தாள் கசிவு ஏற்பட்டு, அது ரத்து செய்யப்பட்டது. மேலும் மறு தேர்வு கடந்த மாதம் (ஜூன்) 21-ந்தேதி நடத்தி முடிக்கப்பட்டது.
வினாத்தாள் கசிவு விவகாரம் விஸ்வரூபம் எடுத்த நிலையில், 2027-ம் ஆண்டு 'நீட்' இளங்கலை நுழைவுத்தேர்வு கணினி வாயிலாக மட்டுமே நடத்தப்படும் என மத்திய அரசு அறிவித்தது. 'நீட்' தேர்வை கணினி வழித்தேர்வாக மாற்றுவது என்பது புதிய யோசனை அல்ல. இது இதற்கு முன்பும் பலமுறை விவாதிக்கப்பட்டு உள்ளது. இருப்பினும் வினாத்தாள் கசிவு சர்ச்சையை தொடர்ந்தே தேர்வு சீர்திருத்தங்களில் ஒன்றாக இந்த முடிவு எடுக்கப்பட்டது. அதன்படி, 'நீட்' கணினி வழித்தேர்வை 1,000-க்கும் மேற்பட்ட மையங்களில் நடத்தவும். என்ஜினீயரிங் படிப்பு சேர்க்கைக்காக நடத்தப்படும் ஜே.இ.இ. நுழைவுத்தேர்வை போலவே, இந்த தேர்வும் குறைந்தபட்சம் 6 நாட்களுக்கு மேல் பிரித்து நடத்தவும், தேர்வு மையங்களின் நம்பகத் தன்மை மற்றும் உள்கட்டமைப்பு வசதிகள் குறித்து ஆய்வு செய்த பின்னரே அவை தேர்வு செய்யப்பட உள்ளதாகவும் தகவல்கள் வெளியாகியுள்ளன. மேலும் இதற்கான விரிவான திட்டம் இறுதி செய்யப்பட்டு வருவதாகவும் கூறப்படுகிறது.