தேசிய செய்திகள்

அடுத்த ஆண்டு முதல் ஆன்லைன் முறையில் நீட் தேர்வு: சுப்ரீம் கோர்ட்டில் தகவல்

இந்த ஆண்டுக்கான நீட் தேர்வு மோசடியில் சிக்கியதால் ரத்து செய்யப்பட்டு உள்ளது.

புதுடெல்லி,

இளநிலை படிப்புகளுக்கான நீட் நுழைவுத்தேர்வு எழுத்துத்தேர்வாக நடத்தப்பட்டு வருகிறது. இது அடிக்கடி வினாத்தாள் கசிவு உள்ளிட்ட முறைகேட்டு சர்ச்சையில் சிக்கி வருகிறது. கடந்த 3-ந்தேதி நடந்த இந்த ஆண்டுக்கான நீட் தேர்வும் இத்தகைய மோசடியில் சிக்கியதால் ரத்து செய்யப்பட்டு உள்ளது. இது தொடர்பாக சுப்ரீம் கோர்ட்டில் வழக்கு நடந்து வருகிறது.

இதில் நீட் தேர்வை நடத்தி வரும் தேசிய தேர்வு முகமை பிரமாண பத்திரம் தாக்கல் செய்துள்ளது. அதில் தேசிய தேர்வு முகமை நடத்தி வரும் முக்கிய தேர்வுகளில் நீட் மட்டுமே எழுத்துத்தேர்வாக நடத்தப்பட்டு வருவதாக கூறியுள்ளது. இதில் முறைகேடு புகார்கள் வருவதால் அதை கணினி அடிப்படையில் (ஆன்லைன்) நடத்துமாறு நிபுணர் குழு ஒன்று பரிந்துரைத்து இருப்பதாகவும் அதில் கூறப்பட்டு உள்ளது.

அதன் அடிப்படையில் சுகாதாரம் மற்றும் குடும்ப நல அமைச்சகத்துடன் கலந்தாலோசித்து, அடுத்த ஆண்டு (2027) முதல் நீட் தேர்வு உள்பட தேசிய தேர்வு முகமை நடத்தும் முக்கியமான அனைத்து தேர்வுகளும் கணினி வழித்தேர்வு தளத்திற்கு மாற்றப்படும் என்றும் அந்த பிரமாண பத்திரத்தில் கூறப்பட்டு உள்ளது.