லக்னோ,
நேபாளத்தில் ஏற்பட்ட பெருவெள்ளத்தால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு உதவ, இந்தியாவின் உத்தரப் பிரதேசத்தைச் சேர்ந்த 6 வயது சிறுவன் ஒருவன் தனது உண்டியல் சேமிப்பு முழுவதையும் நிவாரண நிதியாக வழங்கி நெகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளார்.
உத்தரப் பிரதேச மாநிலம், பிகாரியா பகுதியைச் சேர்ந்த அர்பாஸ் ஷேக் என்ற 6 வயது சிறுவன், கடந்த ஓராண்டாக தனது உண்டியலில் சிறுகச் சிறுகச் சேர்த்து வைத்திருந்த ரூ.4,115 பணத்தை நேபாள வெள்ள நிவாரணத்திற்காக வழங்கியுள்ளார். நேபாளத்தில் அண்மையில் ஏற்பட்ட கடுமையான வெள்ளம் மற்றும் நிலச்சரிவினால் மக்கள் படும் துயரங்களைக் தொலைக்காட்சியில் கண்ட அச்சிறுவன், அவர்களுக்கு உதவ வேண்டும் என்று தனது பெற்றோரிடம் தெரிவித்துள்ளார்.
சிறுவனின் இந்த உன்னதமான எண்ணத்தை ஊக்குவிக்கும் வகையில், அவனது குடும்பத்தினர் அச்சிறுவனை மாவட்ட கலெக்டர் மகேந்திர சிங் தன்வரிடம் அழைத்துச் சென்றனர். மாவட்ட கலெக்டரிடம் தனது உண்டியலை நேரடியாக ஒப்படைத்த சிறுவன் அர்பாஸின் மனிதநேய பண்பை கலெக்டர் மனதாரப் பாராட்டியுள்ளார்.
"உதவி செய்வதற்கும் கருணை காட்டுவதற்கும் வயது ஒரு தடையல்ல" என்பதை உலகிற்கு உணர்த்திய இந்த சிறுவனின் செயல் சமூக வலைதளங்களில் வைரலாகி, பொதுமக்களின் பாராட்டுகளைப் பெற்று வருகிறது.