சென்னை,
பல்கலைக்கழக மானியக் குழுவான யு.ஜி.சி. சார்பில் நடத்தப்பட்ட ‘நெட்’ (NET) தகுதித் தேர்வு முடிவுகள் வெளியிடப்பட்டுள்ளன. இதில், உதவி பேராசிரியராக பணியாற்றுவதற்கு 50,145 பேர் தகுதி பெற்றுள்ளனர்.
நாடு முழுவதும் உள்ள உயர்கல்வி நிறுவனங்களில் உதவி பேராசிரியராக பணியாற்றவும், இளநிலை ஆராய்ச்சி உதவித்தொகை பெறவும் யு.ஜி.சி. நெட் தேர்வில் தகுதி பெறுவது முக்கியமானதாகும். அதேபோல், பல்கலைக்கழகங்களில் பி.எச்.டி. மாணவர் சேர்க்கைக்கும் யு.ஜி.சி. நெட் தேர்வு மதிப்பெண்கள் அடிப்படையாக கொள்ளப்படுகின்றன.
நடப்பாண்டுக்கான யு.ஜி.சி. நெட் தேர்வு ஜூன் 22 முதல் ஜூலை 5-ம் தேதி வரை நடைபெற்றது. நாடு முழுவதும் 6 லட்சத்து 7,151 மாணவ, மாணவிகள் தேர்வை எழுதினர்.
இந்தத் தேர்வுக்கான முடிவுகள் நேற்று முன்தினம் வெளியிடப்பட்டன. இதில், இளநிலை ஆராய்ச்சி உதவித்தொகை மற்றும் உதவி பேராசிரியர் பணிக்கு 4,241 பேர் தகுதி பெற்றுள்ளனர்.
மேலும், உதவி பேராசிரியர் பணிக்கும், பி.எச்.டி. சேர்க்கைக்கும் 45,904 பேர் தகுதி பெற்றுள்ளனர். பி.எச்.டி. மாணவர் சேர்க்கைக்கு மட்டும் 97,434 பேர் தகுதி பெற்றுள்ளனர்.
இதற்கிடையே, வினாத்தாளில் ஏற்பட்ட பிழை காரணமாக ரத்து செய்யப்பட்ட ஆங்கிலம், வணிகவியல் மற்றும் சமூகவியல் பாடப்பிரிவுகளுக்கான தேர்வு, வரும் செப்டம்பர் 9 மற்றும் 10-ம் தேதிகளில் நடைபெறும் என யு.ஜி.சி. தெரிவித்துள்ளது.