பெரோஸ்பூர்,
பஞ்சாப்பின் பெரோஸ்பூர் மாவட்டத்தில் பாகிஸ்தான் எல்லையையொட்டி உசைனிவாலா கிராமம் உள்ளது. சட்லஜ் நதிக்கு அந்த கரையில் அமைந்திருக்கும் இந்த பகுதியை, நாட்டின் பிற பகுதிகளுடன் இணைக்கும் வகையில் நதியின் குறுக்கே பாலம் ஒன்று கட்டப்பட்டு இருந்தது.
கடந்த 1971ம் ஆண்டு இந்தியாபாகிஸ்தான் இடையே போர் நடந்தபோது, எதிரி நாட்டுப்படைகள் முன்னேறாமல் இருப்பதற்காக இந்த பாலம் தகர்க்கப்பட்டது. பின்னர் போர் முடிவடைந்ததும் அங்கு 280 அடி தூரத்துக்கு தற்காலிக பாலம் ஒன்று அமைக்கப்பட்டது.
இந்த தற்காலிக பாலத்தை மாற்றிவிட்டு 82.40 மீட்டர் தொலைவுக்கு நிரந்தர பாலம் அமைக்கும் பணிகளை எல்லையோர சாலை அமைப்பிடம் கடந்த 2015ம் ஆண்டு ஒப்படைக்கப்பட்டது. அதன்படி இந்த பாலப்பணிகள் தொடங்கி முடிவடைந்தது.
பாதுகாப்பு முக்கியத்துவம் வாய்ந்த இந்த புதிய பாலத்தை ராணுவ மந்திரி நிர்மலா சீதாராமன் நேற்று திறந்து வைத்தார். அப்போது அவர் கூறுகையில், சுதந்திர போராட்டத்தில் உயிர்த்தியாகம் செய்த பகத்சிங், சுக்தேவ், ராஜ்குரு ஆகியோருடன் தொடர்புடைய பூமியாகும், உசைனிவாலா. இந்த புனித பூமியில் பணியாற்றும் அரிய வாய்ப்பு பெற்றிருப்பதை, இங்கு பணியமர்த்தப்பட்டு உள்ள ராணுவ வீரர்கள் மனதில் கொள்ள வேண்டும் என்று தெரிவித்தார்.