பஹல்காம்,
ஜம்மு காஷ்மீரின் பிரபல சுற்றுலா தலமான பஹல்காமில், சுற்றுலா பயணியரின் பாதுகாப்பை மேம்படுத்தும் வகையில், அனைத்து சேவை வழங்குனர்களுக்கும் தனித்துவமான கியூ.ஆர். கோடு அடிப்படையிலான அடையாள முறை அறிமுகப்படுத்தப்பட்டு உள்ளது.
யூனியன் பிரதேசமான ஜம்மு காஷ்மீரில், முதல்வர் ஒமர் அப்துல்லா தலைமையில் தேசிய மாநாட்டு கட்சி ஆட்சி நடக்கிறது. இங்கு, அனந்த்நாக் மாவட்டத்தில் உள்ள சுற்றுலா தலமான பஹல்காமுக்கு ஆயிரக்கணக்கான சுற்றுலா பயணியர் வருகின்றனர். இங்கு, 2025 ஏப். 22ல் பயங்கரவாதிகள் நடத்திய தாக்குதலில் 26 பேர் கொல்லப்பட்டனர். இதையடுத்து, சுற்றுலா பயணியரின் வருகை குறைந்தது. தற்போது பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டதை அடுத்து சுற்றுலா பயணியரின் எண்ணிக்கை அதிகரித்து வருகிறது.
இந்நிலையில், பஹல்காம் சுற்றுலா தலத்தில், சுற்றுலா பயணியரின் பாதுகாப்பை மேம்படுத்தும் வகையில், அனைத்து சேவை வழங்குனர்களுக்கும் தனித்துவமான, கியூ.ஆர். கோடு அடிப்படையிலான அடையாள முறையை அதிகாரிகள் அறிமுகப்படுத்தி உள்ளனர். இதன் மூலம் குதிரை சவாரி நடத்துபவர்கள், நடைபாதை வியாபாரிகள், வணிக நிறுவனங்கள் மற்றும் வெளிமாநிலங்களில் இருந்து வரும் வியாபாரிகள் என, அனைவரையும் எளிதாக அடையாளம் காண முடியும்.
இது குறித்து, அரசு அதிகாரி ஒருவர் கூறியதாவது, ஒவ்வொரு சேவை வழங்குனரும் போலீஸ் விசாரணைக்கு உட்படுத்தப்படுகிறார். போலீசாரின் அறிக்கை கிடைத்ததும், அதிகாரிகள் பல கட்ட ஆய்வு நடத்திய பின்னரே, அவருக்கு கியூ.ஆர் கோடு வழங்கப்படுகிறது. இதில், சேவை வழங்குநரின் பெயர், அவரது தந்தை பெயர், முகவரி, மொபைல் போன் எண், ஆதார் எண், பதிவு எண், சேவை விபரம் உள்ளிட்டவை இருக்கும். சுற்றுலா பயணியர் தங்கள் மொபைல் போன் மூலம் இந்த கியூ.ஆர் கோடை 'ஸ்கேன் செய்வதன் மூலம், அந்த நபர் உண்மையான அங்கீகரிக்கப்பட்ட நபரா என்பதை உறுதி செய்ய முடியும். இவ்வாறு அவர் கூறினார்.