ஆக்ரா,
உத்தரபிரதேச மாநிலம் ஆக்ரா அருகே உள்ளது ஜகதீஷ்புரா. இந்த ஊரை சேர்ந்த மணமகனுக்கும், அருகே உள்ள ஹத்ராசை சேர்ந்த புதுப்பெண்ணுக்கும் திருமணம் நடைபெற்றது. வழக்கமான திருமண சடங்குகள் முடிந்ததும் மாப்பிள்ளை வீட்டுக்கு புதுப்பெண்ணை அழைத்து வந்திருந்தனர்.
முதலிரவுக்கான ஏற்பாடுகள் நடந்து வந்த நிலையில் புதுப்பெண்ணின் அதிரடி நடவடிக்கையால் திருமண வீடு களேபரமானது. மணமகன் அறையில் நுழைந்த புதுப்பெண், தன்னிடம் வெட்கத்துடன் கனிவாக பேசுவாள் என்று எதிர்பார்த்து காத்திருந்தார் மாப்பிள்ளை.
ஆனால் புதுப்பெண், ரூ.90 லட்சம் ரொக்கமாகதந்தால்தான் முதலிரவு நடக்கும் என்று கூறி மாப்பிள்ளையை அதிர்ச்சி அடைய வைத்து உள்ளார். மணமகன் இதற்கு கடுமையாக எதிர்ப்பு தெரிவித்ததால் இருவருக்கும் இடையே கடும் வாக்குவாதம் ஏற்பட்டது. உடனே இருவரும் முதலிரவு அறையை திறந்து கொண்டு இருவரும் வெளியே வந்ததால் மணமகன் வீட்டார் பெண்ணுக்கு அறிவுரை கூறினர்.
ஆனாலும் அவர் சமாதானம் ஆகவில்லை. தங்கள் குடும்பத்தினருக்கு தகவல் கொடுத்ததால் சற்று நேரத்தில் அவர்களும் அங்கு வந்துவிட்டனர். அவர்களும் பெண்ணுக்கு அறிவுரை கூறாமல் ஆதரவாக பேசியதால், கல்யாண வீடு கலவர வீடானது. தகராறில் பொருட்கள் தூக்கிவீசப்பட்டன. மேலும் மாப்பிள்ளை வீட்டாரை வீட்டுக்குள் வைத்து வெளியில் பூட்டிய மணமகள் வீட்டார், சமையல் கியாஸ் குழாயை திறந்துவிட்டு, வீட்டுக்கு தீவைக்க முயன்றுள்ளனர்.
இதனால் மாப்பிள்ளை வீட்டார் கூச்சல் போட்டதால் அக்கம்பக்கத்தினர் வந்து சமாதானம் பேசினர். அவர்களின் சமாதானத்துக்கும் பெண் வீட்டார் கட்டுப்படாததால், விஷயம் போலீஸ் நிலையம் சென்றது. தங்களை உயிருடன் கொளுத்த முடிவு செய்ததாக மணமகன் வீட்டார் புகார் செய்தனர். தனக்கு திருமணத்தில் விருப்பம் இல்லை என்றும், பணம் நகை தருவதாக சொன்னதால்தான் திருமணத்துக்கு சம்மதித்ததாகவும் அந்த பெண் கூறி உள்ளார்.
முதலிரவு அறையில் தனது கோரிக்கைக்கு கணவர் இசைந்து கொடுக்காததால் அங்கிருந்த நகைகளையும், விலையுயர்ந்த பொருட்களையும் எடுத்துக்கொண்டு தங்கள் குடும்பத்தினரை கூப்பிட்டு தகராறில் ஈடுபட்டுள்ளார். பின்னர் விலையுயர்ந்த நகை-பொருட்களுடன் அங்கிருந்து தப்பி உள்ளார். அதில் மாமியாரின் நகைகளும் இருந்ததாக புகாரில் கூறப்பட்டுள்ளது.
இதுகுறித்த புகாரில் போலீசார் நடவடிக்கை எடுக்க தயங்கியதாக மாப்பிள்ளை வீட்டார் கோர்ட்டை நாடினர். அதன்பிறகு தான் போலீசார் இந்த விவகாரத்தில் நடவடிக்கை எடுக்கத் தொடங்கியதாக தெரிகிறது. திருமண ஏற்பாடு செய்த புரோக்கரை போலீசார் தேடி வருகிறார்கள். இந்த சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.