பெங்களூரு,
பெங்களூரு உள்பட மாநிலம் முழுவதும் கொரோனா பரவல் காரணமாக பிறப்பிக்கப்பட்டு இருந்த வார இறுதி நாட்கள் ஊரடங்கை அரசு ரத்து செய்திருந்தது. ஆனாலும் இரவு நேர ஊரடங்கு இரவு 10 மணியில் இருந்து அதிகாலை 5 மணிவரை அமலில் இருக்கும் என்று அரசு உத்தரவிட்டுள்ளது.
இந்த நிலையில், இரவு நேர ஊரடங்கு 10 மணிக்கே அமலுக்கு வருவதால், ஓட்டல் வியாபாரம், மதுபான விடுதி, ரெஸ்டாரண்டுகளில் வியாபாரம் பாதிக்கப்படுவதாக உரிமையாளர்கள் கூறினார்கள். இரவு நேர ஊரடங்கு நேரத்தை இரவு 11 மணிக்கு மாற்ற வேண்டும் என்றும் அரசுக்கு ஓட்டல் உரிமையாளர்கள் கோரிக்கை விடுத்தனர்.
இதுகுறித்து பெங்களூருவில் சுகாதாரத்துறை மந்திரி சுதாகரிடம் நிருபர்கள் கேள்வி எழுப்பினார்கள். இதற்கு பதிலளித்து அவர் கூறுகையில், "மாநிலத்தில் கொரோனா பரவல் அதிகமாக இருந்தாலும் வியாபாரிகள், மக்களின் நலனை கருத்தில் கெண்டு வார இறுதி நாட்கள் ஊரடங்கை அரசு ரத்து செய்திருக்கிறது.
இந்த சந்தர்ப்பத்தில் இரவு நேர ஊரடங்கு நேரத்தை குறைக்கும்படி கூறுவது சரியில்லை. பெங்களூரு உள்பட மாநிலம் முழுவதும் இரவுநேர ஊரடங்கு நேரத்தில் மாற்றம் செய்யப்படாது. தற்போது அமலில் இருக்கும் நேரமே தொடரும்," என்றார்.