தேசிய செய்திகள்

குஜராத்தின் 4 முக்கிய நகரங்களில் வருகிற 31ந்தேதி வரை இரவு ஊரடங்கு; அரசு முடிவு

குஜராத்தின் 4 முக்கிய நகரங்களில் நாளை முதல் வருகிற 31ந்தேதி வரை இரவு ஊரடங்கை அமல்படுத்த அரசு முடிவு செய்துள்ளது.

ராஜ்கோட்,

குஜராத்தில் கொரோனா பாதிப்பு எண்ணிக்கை 2.7 லட்சத்திற்கும் கூடுதலாக உயர்ந்து காணப்படுகிறது. 4 ஆயிரத்து 425 பேர் உயிரிழந்த நிலையில், குணமடைந்தோர் எண்ணிக்கை 2.69 லட்சம் அளவில் உள்ளது ஆறுதல் அளிக்கிறது. குணமடைந்தோர் சதவீதம் 96.72 ஆக உள்ளது. 4,714 பேர் சிகிச்சை பெற்று வருகின்றனர்.

கடந்த சில நாட்களாக குஜராத்தில் 800க்கும் மேற்பட்டோருக்கு பாதிப்புகள் உறுதி செய்யப்பட்டு வருகின்றன. குஜராத்தில் கொரோனா பாதிப்புகள் அதிகரிக்க தொடங்கியுள்ளது எச்சரிக்கையை ஏற்படுத்தி உள்ளது.

இதனை முன்னிட்டு தொற்றை கட்டுப்படுத்த இரவு ஊரடங்கை அமல்படுத்த குஜராத் அரசு முடிவு செய்துள்ளது. இதன்படி, மார்ச் 17ந்தேதி (நாளை) முதல் மார்ச் 31ந்தேதி வரை இரவு 10 மணி முதல் காலை 6 மணிவரை ஆமதாபாத், வதோதரா, சூரத் மற்றும் ராஜ்கோட் ஆகிய 4 முக்கிய நகரங்களில் இரவு ஊரடங்கு அமலில் இருக்கும் என தெரிவிக்கப்பட்டு உள்ளது.