புதுடெல்லி,
டெல்லி மருத்துவ மாணவி நிர்பயா கற்பழித்து கொலை செய்யப்பட்ட வழக்கில் முகேஷ்குமார் சிங், பவன்குப்தா, வினய்குமார் சர்மா, அக்ஷய்குமார் சிங் ஆகிய 4 குற்றவாளிகளுக்கு டெல்லி கோர்ட்டு தூக்கு தண்டனை விதித்தது. சுப்ரீம் கோர்ட்டும் இதனை உறுதி செய்தது.
அவர்கள் தரப்பில் ஒவ்வொருவராக மாறி மாறி தாக்கல் செய்த கருணை மனு, மறுஆய்வு மனு, சீராய்வு மனு போன்ற சட்ட நடவடிக்கைகளால் அவர்களை தூக்கில் போடுவது பல முறை தள்ளி போனது.
இந்நிலையில், குற்றவாளிகள் 4 பேரின் சட்டப்பூர்வ முறையிலான கோரிக்கைகள் அனைத்தும் தள்ளுபடியாகின. இதனை அடுத்து, அவர்கள் 4 பேருக்கும் வரும் 20ந்தேதி காலை 5.30 மணியளவில் தூக்கு தண்டனை நிறைவேற்ற டெல்லி நீதிமன்றம் புதிய மரண வாரண்ட் உத்தரவை பிறப்பித்தது.
முகேஷ் சிங் தமது தூக்கு தண்டனையை ரத்து செய்யக்கோரி, டெல்லி பாட்டியாலா நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்தார். அந்த மனுவில் 2012 டிசம்பர் 17ந்தேதி போலீசார் தம்மை ராஜஸ்தானில் கைது செய்தனர் என்றும், சம்பவம் நடந்த டிசம்பர் 16ந்தேதி தாம் டெல்லியில் இல்லை எனவும் மனுவில் தெரிவித்துள்ளார். இந்த மனு டெல்லி பாட்டியாலா நீதிமன்றத்தில் நேற்று முன்தினம் தள்ளுபடி செய்யப்பட்டது.
இந்நிலையில், விசாரணை நீதிமன்ற உத்தரவை எதிர்த்து டெல்லி உயர் நீதிமன்றத்தில் முகேஷ் மனு ஒன்றை தாக்கல் செய்துள்ளார். இதுபற்றிய விசாரணை நேற்று நடந்தது. இதில் இரு தரப்பு விவாதங்கள் நடந்து முடிந்த நிலையில், டெல்லி உயர் நீதிமன்றம் உத்தரவை ஒத்தி வைத்திருந்தது.
இந்நிலையில், விசாரணை நீதிமன்ற உத்தரவுக்குள் தலையிட எந்தவித அடிப்படை முகாந்திரமும் இல்லை என கூறி அந்த மனுவை டெல்லி உயர் நீதிமன்றம் நேற்று தள்ளுபடி செய்தது. இதனை எதிர்த்து சுப்ரீம் கோர்ட்டில் முகேஷ் சிங் இன்று மனு ஒன்றை தாக்கல் செய்து உள்ளார்.
அதில், நிர்பயா வழக்கு சம்பவம் நடந்த கடந்த 2012ம் ஆண்டு டிசம்பரில் தாம் டெல்லியிலேயே இல்லை என தெரிவித்துள்ளார். இந்த மனு மீது இன்று 2.30 மணியளவில் விசாரணை நடத்தப்படும் என தெரிவிக்கப்பட்டது. எனினும், இந்த மனுவை சுப்ரீம் கோர்ட்டு நீதிபதிகள் இன்று தள்ளுபடி செய்து உத்தரவிட்டனர். இதனிடையே, குற்றவாளி அக்ஷயின், மனைவியின் விவாகரத்து வழக்கு வரும் 24ந்தேதி விசாரணைக்கு எடுத்து கொள்ளப்படுகிறது.