பெங்களூரு,
பெங்களூரு அருகே பிடதியில் நித்யானந்தா சாமியாரின் ஆசிரமம் அமைந்துள்ளது. கடந்த சில ஆண்டுகளுக்கு முன்பு பாலியல் புகாரில் நித்யானந்தா கைது செய்யப்பட்டார். அவருக்கு கர்நாடக ஐகோர்ட்டு ஜாமீன் வழங்கி உத்தரவிட்டது. அதன் பிறகு அவர், கீழ்கோர்ட்டில் நடைபெற்று வரும் வழக்கின் விசாரணைக்காக நேரில் ஆஜராகவில்லை.
இதையடுத்து அவரது முன்னாள் சீடர் லெனின் கருப்பன் என்பவர் கர்நாடக ஐகோர்ட்டில், நித்யானந்தாவுக்கு வழங்கப்பட்டுள்ள ஜாமீனை ரத்து செய்யக்கோரி மனுதாக்கல் செய்தார். அந்த மனு மீது விசாரணை நடைபெற்று வந்தது. இந்த வழக்கில் விளக்கம் அளிக்கும்படி நித்யானந்தாவுக்கு ஐகோர்ட்டு நோட்டீஸ் அனுப்பியது.
இந்தநிலையில் இந்த வழக்கின் தீர்ப்பை ஐகோர்ட்டு நீதிபதி ஜான் மைக்கேல் குன்ஹா நேற்று வழங்கினார். அதில், நித்யானந்தாவுக்கு வழங்கப்பட்டுள்ள ஜாமீனை ரத்து செய்வதாக நீதிபதி அறிவித்தார். இதையடுத்து கர்நாடக போலீசார் நித்யானந்தாவை கைது செய்ய தயாராகி வருகிறார்கள். வெளிநாட்டில் தலைமறைவாக உள்ள அவருக்கு ஏற்கனவே புளு கார்னர் நோட்டீஸ் பிறப்பிக்கப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.