தேசிய செய்திகள்

2 ஆண்டுகளுக்கு கட்டுமான பணி மேற்கொள்ளவேண்டாம் என நிதி ஆயோக் பரிந்துரை செய்ததா? - மத்திய அரசு விளக்கம்

2 ஆண்டுகளுக்கு கட்டுமான பணி மேற்கொள்ளவேண்டாம் என நிதி ஆயோக் பரிந்துரை செய்ததாக பரவும் தகவலுக்கு மத்திய அரசு விளக்கம் அளித்துள்ளது.

சென்னை,

மேற்காசிய போர் காரணமாக இந்தியாவின் ஏற்றுமதி-இறக்குமதி கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளதோடு, பெட்ரோல்-டீசல் சப்ளை, சமையல் கியாஸ் வினியோகத்திலும் தொய்வு ஏற்பட்டுள்ளது. இது விலைவாசி உயர்வு உள்ளிட்ட பொதுமக்களின் அன்றாட வாழ்க்கையில் கடுமையான தாக்கத்தை ஏற்படுத்தி இருக்கிறது.

இந்த சூழலில், கட்டுமான செலவு அதிகரித்திருப்பதால் டெல்லியில் உள்ள மத்திய வீட்டு வசதி மற்றும் நகர்ப்புற அமைச்சகம் மற்றும் சுகாதார அமைச்சக அலுவலகங்களை கொண்ட நிர்மன் பவன், மத்திய தொழில் மற்றும் வர்த்தக அமைச்சகம், சிறு, குறு மற்றும் நடுத்தர தொழில் நிறுவனங்கள் அமைச்சக அலுவலகங்களை உள்ளடக்கிய உத்யோக் பவன், மத்திய கல்வி மற்றும் சட்ட அமைச்சக அலுவலகங்களை கொண்ட சாஸ்திரி பவன் கட்டிடங்களின் கட்டுமான பணிகள் உள்பட முக்கியமான எந்தவித கட்டுமான பணிகளையும் இந்தியாவில் இன்னும் 2 ஆண்டுகளுக்கு செய்யவேண்டாம் என்று நிதி ஆயோக் அறிவுறுத்தியிருப்பதாக ஒரு தகவல் சமூக வலைத்தளங்களில் வேகமாக பரவி வருகிறது.

இதுதொடர்பாக மத்திய அரசு விளக்கம் அளித்துள்ளது. மத்திய அரசின் அதிகாரப்பூர்வ சமூக ஊடக கணக்கான பத்திரிகை தகவல் அலுவலகம் வெளியிட்டுள்ள பதிவில், மேற்காசிய போர் காரணமாக ஏற்பட்டுள்ள பொருளாதார நெருக்கடியால் இந்தியாவில் 2 ஆண்டுகளுக்கு கட்டுமானங்கள் எதுவும் மேற்கொள்ளவேண்டாம் என நிதி ஆயோக் கூறியதாக பரவும் தகவல் பொய்யானது. நிதி ஆயோக் இதுபோன்ற பரிந்துரைகள் எதுவும் செய்யவில்லை என்று கூறப்பட்டுள்ளது.