தேசிய செய்திகள்

நிதிஷ் குமார் மாநிலங்களவை எம்.பி.யாக ஏப்ரல் 10-ல் பதவியேற்பு

நாடாளுமன்ற இரு அவைகளிலும் உறுப்பினராக வேண்டும் என்பதே தன்னுடைய நீண்டகால விருப்பம் என நிதிஷ் குமார் கூறினார்.

பாட்னா

பீகாரில் தேசிய ஜனநாயக கூட்டணியில் இடம் பெற்றுள்ள ஐக்கிய ஜனதா தள கட்சியின் தலைவரான நிதிஷ் குமார் முதல்-மந்திரியாக செயல்பட்டு வந்த நிலையில், சமீபத்தில், மாநிலங்களவை தேர்தலுக்கு போட்டியிட முடிவு செய்து, அதற்கான நடவடிக்கையில் இறங்கினார். இதனால், முதல்-மந்திரி பதவியை அவர் ராஜினாமா செய்கிறார். இதற்கு கட்சிக்குள் எதிர்ப்பு கிளம்பியது. அவர் பதவி விலக கூடாது என தொண்டர்கள் வலியுறுத்தினர். இந்த நிலையில், எம்.எல்.சி. பதவியில் இருந்து நிதிஷ் குமார் கடந்த சில நாட்களுக்கு முன்பு விலகினார்.

இந்நிலையில், வருகிற ஏப்ரல் 10-ந்தேதி முறைப்படி மாநிலங்களவை எம்.பி.யாக அவர் பதவியேற்க உள்ளார் என பீகார் பா.ஜ.க. தலைவர் சஞ்சய் சராவ்கி இன்று கூறினார். அடுத்து புதிய அமைச்சரவை உருவாவதற்கான நெறிமுறைகளை பற்றி குறிப்பிட்ட அவர், அதில் மூத்த கட்சி தலைவர்கள் மற்றும் கூட்டணி கட்சியினரும் ஒருங்கிணைந்து செயல்படுவர் என கூறினார். இதற்காக முதல்-மந்திரி, நம்முடைய பா.ஜ.க.வின் மத்திய தலைமை மற்றும் தேசிய ஜனநாயக கூட்டணியினர் அனைவரும் ஒன்றாக அமர்ந்து, கூடி முடிவு செய்வர் என்று கூறினார்.

நாடாளுமன்ற இரு அவைகளிலும் உறுப்பினராக வேண்டும் என்பதே தன்னுடைய நீண்டகால விருப்பம் என கூறிய நிதிஷ் குமார், வளர்ச்சியடைந்த பீகாரை கட்டமைப்பதில் தனக்கு உள்ள ஈடுபாட்டை வெளிப்படுத்தியதோடு, புதிய அரசுக்கு தன்னுடைய ஒத்துழைப்பையும், வழிகாட்டுதலையும் வழங்குவேன் என்றும் கூறினார்.

நீண்டகாலத்திற்கு பீகாரில் முதல்-மந்திரியாக பதவி வகித்தவர் என்ற பெருமைக்குரியவர் நிதிஷ் குமார். கடந்த ஆண்டு நவம்பர் மாதம்தான் 10-வது முறையாக முதல்-மந்திரியாக நிதிஷ்குமார் பதவியேற்றார். இந்நிலையில், மாநிலங்களவை எம்.பி.க்கான தேர்தலில் அவர் போட்டியிடுகிறார். இதனை முன்னிட்டு முதல்-மந்திரி பதவியை ராஜினாமா செய்ய இருக்கிறார்.

SCROLL FOR NEXT