நீதிபதி கர்ணன் கடந்த மாதம் 9-ந்தேதி தண்டனை விதிக்கப்பட்ட அதே நாளில், சென்னைக்கு வந்து தலை மறைவானார். அவரை பிடிக்க மேற்கு வங்காள மாநில போலீஸ் டி.ஜி.பி., போலீஸ் தனிப்படைகளை அமைத்தார்.
அப்படைகள், சென்னை உள்பட தமிழ்நாட்டின் பல பகுதிகளில் நீதிபதி கர்ணனை தேடி வந்தது. தலைமறைவாக இருந்த நிலையில், கர்ணன் கடந்த 12-ந் தேதி, நீதிபதி பணியில் இருந்து ஓய்வு பெற்றார்.
43 நாட்களுக்கு பின்பு நீதிபதி எஸ்.கர்ணன் கோவையில் நேற்று கைது செய்யப் பட்டார். இந்த நிலையில் நீதிபதி கர்ணனை ஜாமீனில் விடுதலை செய்யக்கோரி அவருக்கு விதிக்கப்பட்ட 6 மாத ஜெயில் தண்டனையை ரத்து செய்யக்கோரி சுப்ரீம் கோர்ட்டில் அவர் சார்பில் வக்கீல் இன்று மனுதாக்கல் செய்தார்.
அப்போது கர்ணனின் கோரிக்கையை ஏற்க நீதிபதிகள் மறுத்து விட்டனர். 7 நீதிபதிகள் கொண்ட சிறப்பு அமர்வு தான் அவருக்கு தண்டனை விதித்தது. எனவே அந்த சிறப்பு அமர்வுதான் எந்த உத்தரவும் பிறப்பிக்க முடியும் என்று கூறி மனுவை நீதிபதிகள் தள்ளுபடி செய்து உத்தரவிட்டனர்.
ஏற்கனவே 2 முறை நீதிபதி கர்ணன் சார்பில் சுப்ரீம் கோர்ட்டில் இது போல் மனுதாக்கல் செய்யப் பட்டது. அந்த மனுக்கள் நிராகரிக்கப்பட்ட நிலையில் தற்போதும் மனு தள்ளுபடி செய்யப்பட்டுள்ளது.