புதுடெல்லி,
இந்தியாவின் சிக்கிம் - சீனாவின் கட்டுப்பாட்டில் உள்ள திபெத் அருகேயுள்ள டோக்லாம் பகுதி, யாருக்கு சொந்தம் என்பதில் சர்ச்சை உள்ளது. கடந்தாண்டு துவக்கத்தில், இப்பகுதியில் சாலை அமைக்கும் பணியில் சீனா ஈடுபட்டது. தகவல் அறிந்ததும், இந்திய ராணுவ வீரர்கள் அங்கு சென்று, அப்பணியை தடுத்து நிறுத்தினர். இதயடுத்து அங்கு பதட்டமான சூழல் ஏற்பட்டது. இரு தரப்பு வீரர்களும், அங்கு, 72 நாட்களாக முகாமிட்டு இருந்தனர். இரு தரப்பு உயரதிகாரிகள் நடத்திய பேச்சுக்கு பின், இரு நாடுகளின் வீரர்களும் வாபஸ் பெறப்பட்டனர்.
இதனால், அங்கு, பதற்றம் தணிந்தது. ஆனால், அண்மைக்காலமாக வெளியாகும் தகவல்கள், டோக்லாம் பகுதியை சீனா முழுமையாக ஆக்கிரமித்திருப்பதை உறுதி செய்வதாக அமைந்துள்ளன. கடந்தாண்டு டிசம்பரில், டோக்லாம் பகுதியில் எடுக்கப்பட்ட செயற்கைக்கோள் படத்தில், ஹெலிகாப்டர் இறங்க உதவும், ஏழு ஹெலிபேட்கள், 10 கான்கிரீட் நிலைகள், ஏராளமான கவச வாகனங்கள் காணப் படுவதை பார்க்க முடிவதாகவும், அங்கு, 1,800 சீன வீரர்கள் நிரந்தர முகாம்அமைத்துள்ள தாகவும் தகவல்கள் கூறுகின்றன. இந்த செய்தி இந்திய ராணுவ தரப்பில் அதிர்ச்சியை ஏற்படுத்தியாக தகவல்கள் வெளியாகியுள்ளன.
இந்த தகவல் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியிருந்த நிலையில், வெளியுறவு துறை செய்தி தொடர்பாளர் ரவீஷ் குமாரிடம், இந்த தகவல் பற்றி செய்தியாளர்கள் கேள்வி எழுப்பினர். இதற்கு பதிலளித்த ரவீஷ் குமார், டோக்லாம் விவகாரத்தை பொறுத்தவரை இந்தியாவின் தற்போதைய நிலைப்பாட்டில் எந்த மாற்றமும் இல்லை என்றார்.