தேசிய செய்திகள்

நம்பிக்கையில்லா தீர்மானம் விவகாரம்; அவை நடவடிக்கைகளில் பங்கேற்க போவதில்லை: ஓம் பிர்லா முடிவு

அவையில் அமளியில் ஈடுபடும் எம்.பி.க்களுக்கு எதிராக நடவடிக்கை எடுக்கும்படி பிர்லாவுக்கு பா.ஜ.க. பெண் எம்.பி.க்கள் கடிதம் எழுதியுள்ளனர்.

புதுடெல்லி,

பட்ஜெட் கூட்டத்தொடரில், ஜனாதிபதி உரைக்கு நன்றி தெரிவித்து நடந்த விவாதத்திற்கு பதிலளித்து பேசுவது தொடர்பாக குறிப்பிடப்பட்ட நாளில் பிரதமர் மோடி மக்களவைக்கு வரவில்லை. எனினும், பின்னர் அவர் நாடாளுமன்ற மேலவையில் அதற்கு பதிலளித்து பேசினார்.

அவர் மக்களவைக்கு வராதது பற்றி குறிப்பிட்ட சபாநாயகர் ஓம் பிர்லா, பிரதமர் மோடியை தாக்க காங்கிரஸ் பெண் எம்.பி.க்கள் முயற்சித்தனர் என திடுக்கிடும் குற்றச்சாட்டை கூறினார். ஆனால் இது ஒரு பொய்யான குற்றச்சாட்டு என காங்கிரஸ் கட்சி மறுத்தது.

இந்நிலையில், பிர்லாவுக்கு எதிராக அவையில் இன்று நம்பிக்கையில்லா தீர்மானம் கொண்டு வரப்பட்டது. இதுபற்றி காங்கிரஸ் எம்.பி. கவுரவ் கோகாய் கூறும்போது, நாங்கள் இன்று மதியம் 1.14 மணியளவில், 94சி விதிகள் மற்றும் ஒழுங்குமுறைகளின்படி, மக்களவை சபாநாயகர் பதவியில் இருந்து ஓம் பிர்லாவை நீக்க கோரி நம்பிக்கையில்லா தீர்மானம் தாக்கல் செய்தோம்.

இதில் மொத்தம் 118 எம்.பி.க்கள் கையெழுத்திட்டனர் என கூறினார். நம்பிக்கையில்லா தீர்மான நோட்டீசை ஆய்வு செய்து முறையான நடவடிக்கை எடுக்கும்படி, அதனை அவையின் பொது செயலாளருக்கு ஓம் பிர்லா அனுப்பினார்.

நம்பிக்கையில்லா தீர்மான நோட்டீசில், ஓம் பிர்லா கடுமையான பாரபட்சத்துடன் நடந்து கொள்கிறார் என குற்றச்சாட்டு கூறப்பட்டு உள்ளது. அவையில் அமளியில் ஈடுபடும் எம்.பி.க்களுக்கு எதிராக நடவடிக்கை எடுக்கும்படி பா.ஜ.க.வை சேர்ந்த பெண் எம்.பி.க்கள், பிர்லாவுக்கு கடிதம் எழுதியுள்ளனர்.

இந்த சூழலில், நம்பிக்கையில்லா தீர்மானம் விவகாரத்தில் ஒரு முடிவு எடுக்கும்வரை அவை நடவடிக்கைகளில் பங்கேற்க போவதில்லை என ஓம் பிர்லா முடிவு செய்துள்ளார்.