தேசிய செய்திகள்

காரப்பொரி இல்லை, காய்கறி... பிரதமர் மோடி பாணியில் ‘தற்செயலாக’ பர்சேஸ் செய்த மம்தா பானர்ஜி

பிரசாரத்தின்போது மம்தா பானர்ஜி காய்கறி மார்க்கெட்டுக்கு சென்று வியாபாரிகளுடன் கலந்துரையாடினார்.

கொல்கத்தா,

மேற்கு வங்காள அரசின் பதவிக்காலம் மே 7-ந்தேதியுடன் நிறைவடைகிறது. இதனை தொடர்ந்து, மேற்கு வங்காள சட்டசபை தேர்தல் 2 கட்டங்களாக நடைபெறுகிறது. இதன்படி, ஏப்ரல் 23-ந்தேதி முதல் கட்ட தேர்தல் நடந்து முடிந்த நிலையில், 29-ந்தேதி 2-ம் கட்ட தேர்தல் நடைபெற உள்ளது. வாக்கு எண்ணிக்கை மே 4-ந்தேதி நடைபெறும் என அறிவிக்கப்பட்டு உள்ளது.

இதனையடுத்து, மேற்கு வங்காளத்தின் ஜர்கிராம் நகரில் தேர்தல் பிரசாரத்தில் ஈடுபட்டபோது, திடீரென வாகனத்தில் இருந்து இறங்கிய பிரதமர் மோடி, சாலையோரம் இருந்த கடைக்கு சென்று, ஆர்வத்துடன் காரப்பொரி கேட்டு வாங்கி சாப்பிட்டார். இது தொடர்பான வீடியோ சமூக வலைதளங்களில் வைரலாகி, 100 மில்லியன் பார்வைகளை கடந்து சாதனை படைத்தது.

இந்த நிலையில், பிரதமர் மோடி பாணியில் பிரசாரத்தின்போது மேற்கு வங்க முதல்-மந்திரி மம்தா பானர்ஜி ‘தற்செயலாக’ காய்கறி மார்க்கெட்டு சென்று பர்சேஸ் செய்துள்ளார். பவானிபூர் தொகுதியில் பிரசாரத்தில் ஈடுபட்ட மம்தா பானர்ஜி, அங்குள்ள காய்கறி மார்க்கெட்டுக்கு சென்று வியாபாரிகளுடன் கலந்துரையாடினார். பின்னர் அங்குள்ள ஒரு கடைகளில் காய்கறிகள் மற்றும் பழங்களை வாங்கினார்.

அரசியல் தலைவர்கள் பிரசாரத்தின்போது சாலையோர கடைகளுக்கு சென்று மக்களுடன் இயல்பாக கலந்து பேசி வாக்கு சேகரிப்பது தென் மாநிலங்களில் அடிக்கடி நடக்கக்கூடிய ஒன்றாகும். இந்த பாணி தற்போது வட இந்திய மாநிலங்களிலும் பிரபலமாகி வருவது குறிப்பிடத்தக்கது.