புதுடெல்லி,
பாகிஸ்தான் ஆக்கிரமிப்பு காஷ்மீரை இந்தியா நினைத்தாலும் கைப்பற்ற முடியாது என்று ஜம்மு காஷ்மீர் முன்னாள் முதல் மந்திரி பரூக் அப்துல்லா கடந்த சில தினங்களுக்கு முன் கருத்து தெரிவித்தார். பரூக் அப்துல்லா கூறும் போது, பாகிஸ்தான் ஆக்கிரமிப்பு காஷ்மீர் பாகிஸ்தானின் ஒரு பகுதியாகும். மறுபக்கம் இருக்கும் பகுதி இந்தியாவுக்குச்சொந்தமானதாகும். இந்தியாவும் பாகிஸ்தானும் எத்தனை ஆண்டுகள் போரிட்டாலும் இந்த நிலைமை மாறாது என்று தெரிவித்து இருந்தார்.
இந்த நிலையில், பரூக் அப்துல்லாவின் கருத்துக்கு பதிலடி கொடுக்கும் வகையில் மத்திய உள்துறை இணை அமைச்சர் ஹன்ஸ்ராஜ் அஹீர் கூறியிருப்பதாவது:-பாகிஸ்தான் ஆக்கிரமிப்பு காஷ்மீர் இந்தியாவுக்கு சொந்தமானது. முந்தைய அரசுகள் செய்த தவறுகளால் அப்பகுதி இப்போது பாகிஸ்தானின் கட்டுப்பாட்டில் உள்ளது. அப்பகுதியைக் கைப்பற்ற வேண்டுமென்று நாம் (இந்தியா) நினைத்துவிட்டால், அதனை எவராலும் தடுக்க முடியாது. பாகிஸ்தானிடம் இருந்து ஆக்கிரமிப்பு காஷ்மீரை மீட்க அனைத்து முயற்சிகளும் மேற்கொள்ளப்படும் என்று தெரிவித்தார்.