புதுடெல்லி,
காஷ்மீரில் பிரிவினைவாத தலைவரின் வீட்டில் பாதுகாப்பு பணியில் இருந்த போலீசார் கொல்லப்பட்ட சம்பவத்திற்கு ஐ.எஸ். பயங்கரவாத இயக்கம் பொறுப்பு ஏற்றது.
கடந்த 2017 நவம்பரில் ஸ்ரீநகரில் பாதுகாப்பு படையுடன் நடைபெற்ற மோதலில் பயங்கரவாதி முகீஸ் கொல்லப்பட்டான். இந்த சண்டையில் ஈடுபட்டது நாங்கள்தான் என ஐ.எஸ். பயங்கரவாத இயக்கம் பொறுப்பு கூறியது. ஆனால் பாதுகாப்பு படையினர் தரப்பில் மறுப்பு தெரிவிக்கப்பட்டது. இப்போது போலீசார் கொல்லப்பட்ட சம்பவத்திற்கும் ஐ.எஸ். பயங்கரவாத இயக்கம் பொறுப்பு ஏற்று உள்ளது. ஆனால் தாக்குதலுக்கு பின்னால் இருப்பது பாகிஸ்தானை சேர்ந்த லஷ்கர்-இ-தொய்பா பயங்கரவாதிகள் என அதிகாரிகள் தரப்பில் தெரிவிக்கப்படுகிறது.
இருப்பினும் ஜம்மு காஷ்மீர் டிஜிபி எஸ்வி வாய்த் பேசுகையில், ஐ.எஸ். பயங்கரவாத இயக்கம் தாக்குதல் நடத்தி உள்ளது என தெளிவாகி உள்ளது என கூறியது கவனம் பெற்றது. ஆனால் உள்துறை தரப்பில் ஐ.எஸ். பயங்கரவாத செயல்பாடு மறுக்கப்பட்டு உள்ளது.
காஷ்மீரில் ஐ.எஸ். பயங்கரவாத இயக்க செயல்பாடு தென்படவில்லை என மத்திய உள்துறை அமைச்சகம் தெரிவித்து உள்ளது.
காஷ்மீர் பள்ளத்தாக்கு பகுதியில் ஐ.எஸ். பயங்கரவாத இயக்கத்திற்கு தளமோ, ஆட்களோ கிடையாது. அங்கு பயங்கரவாத இயக்கத்தின் செயல்பாடு கிடையாது என உள்துறை அமைச்சக செய்தித் தொடர்பாளர் தெரிவித்து உள்ளார்.