டெல்லியில் அமைந்துள்ள பிட்ஸ் பிலானி கல்லூரியில் படிக்கும் மேகா என்ற பெண் டெல்லி மெட்ரோ ரயில் நிலையத்தில் தன்னை ஒரு மர்ம நபர் பின்தொடர்ந்ததாக டுவிட்டரில் பதிவிட்டுள்ளார்.
மேலும் அவர், 'பெண்களே, மெட்ரோ ரயில் அத்தனை பாதுகாப்பாக இல்லை' என்றும் எச்சரிக்கை விடுத்துள்ளார். அவருடைய டுவிட்டர் பதிவில், 'பெண்களே, எல்லா மெட்ரோ ரயில் நிலையங்களும் அத்தனை பாதுகாப்பானதாக இல்லை. நான் கோல்ப் கோர்ஸ் மெட்ரோ ரயில் நிலையத்தில் எனது அப்பா வருவதற்காக காத்துக்கொண்டிருந்தேன்.
அப்போது நான், போனில் எனது வீட்டில் இருப்பவர்களிடம் பேசிக்கொண்டிருந்தேன். எனது அருகிலிருந்த ஒருவன் நான் பேசுவதை ஒட்டுக் கேட்டான்.
எனவே நான் ஹெட்போன் போட்டு அமைதியாக பேசினேன். அவன் என்னைச் சுற்றி வந்ததைத் தொடர்ந்து நான் அங்கிருந்து நகரத் தொடங்கினேன். அவனும் என்னை பின் தொடர்ந்தான்.
நான் நிற்கும் பொழுது அவனும் நின்றான். என்னை பின் தொடர்ந்த அவன், என்னை தள்ளிவிட பார்த்தான். நான் அவனை தள்ளிவிட்டு அவனை அடித்தேன்.
நான் அவனை கீழே தள்ளிவிட்டு குரல் எழுப்பினேன். ஆனால் உதவிக்கு யாரும் வரவில்லை. கண்காணிப்பாளர் வேறு யாருடனோ பேசிக்கொண்டிருந்தார்' என்று பதிவிட்டுள்ளார்.
அவருடைய பதிவு சமூக வலைதளத்தில் வைரலாகியுள்ளது. மேலும் இந்த விவகாரம் பெரும் சர்ச்சையையும் கிளப்பியுள்ளது.