புனே,
அமெரிக்காவில் வசித்து வரும் இந்தியரான அபிஜித் பானர்ஜி மற்றும் அவரது மனைவி எஸ்தர் டப்லோ உள்பட 3 பேருக்கு இந்த ஆண்டுக்கான பொருளாதார நோபல் பரிசு அறிவிக்கப்பட்டு உள்ளது. அவர் ஒரு இடதுசாரி சிந்தனையாளர் என மத்திய மந்திரி பியூஸ் கோயல் வர்ணித்துள்ளார்.
புனேயில் நேற்று செய்தியாளர்களை சந்தித்த அவர், இது தொடர்பாக கூறுகையில், நோபல் பரிசு வென்றதற்காக அபிஜித் பானர்ஜியை வாழ்த்துகிறேன். அவரது சிந்தனை முழுவதும் இடதுசாரி சார்ந்தவை என்பது உங்கள் அனைவருக்கும் தெரியும் என்று தெரிவித்தார்.
காங்கிரஸ் கட்சியின் வறுமை ஒழிப்பு திட்டமான நியாய் திட்டத்தை பானர்ஜி ஆதரித்ததாக கூறிய பியூஸ் கோயல், அவரது இந்த சித்தாந்தத்தை இந்திய மக்கள் நிராகரித்து விட்டதாகவும் கூறினார்.
முன்னதாக இந்திய பொருளாதாரம் குறித்து கருத்து தெரிவித்திருந்த அபிஜித் பானர்ஜி, நாட்டின் பொருளாதாரம் தடுமாற்றத்தில் இருப்பதாகவும், அது உடனடியாக சீரடையும் என உறுதி கூற முடியாது என்றும் கூறியிருந்தது குறிப்பிடத்தக்கது.