பெங்களூரு,
கர்நாடக மாநிலம் பெங்களூரு கோனனகுண்டே போலீஸ் நிலையத்தில் இன்ஸ்பெக்டராக பணியாற்றி வருபவர் பாப்பண்ணா. இவருக்கும், பெண் ரவுடியான யசஷ்வினிக்கும் இடையே பழக்கம் ஏற்பட்டது. யசஷ்வினி மீது பல்வேறு போலீஸ் நிலையங்களில் வழக்குகள் உள்ளன. இந்த நிலையில், இன்ஸ்பெக்டர் பாப்பண்ணா மீது போலீஸ் கமிஷனர் சீமந்த்குமார் சிங்கிடம் யசஷ்வினி பரபரப்பு புகார் அளித்துள்ளார்.
அதில், இன்ஸ்பெக்டர் பாப்பண்ணா எனக்கு வாட்ஸ்-அப்பில் ஆபாச குறுந்தகவல்கள் அனுப்பி தொல்லை கொடுக்கிறார். செல்போனில் தொடர்பு கொண்டு ஆபாசமாக பேசுகிறார். அத்துடன் இதுபற்றியெல்லாம் வெளியே சொன்னால் கூலிப்படையை ஏவி கொலை செய்து விடுவதாகவும் இன்ஸ்பெக்டர் பாப்பண்ணா மிரட்டுகிறார். அவர் மீது சட்டப்படி நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று கூறியுள்ளார்.
அந்த புகாருடன் வாட்ஸ்-அப்பில் இன்ஸ்பெக்டர் பாப்பண்ணா அனுப்பிய ஆபாச குறுந்தகவல்கள், புகைப்படங்கள், செல்போனில் பேசிய ஆடியோ ஆதாரங்களையும் போலீஸ் கமிஷனரிடம் யசஷ்வினி வழங்கி இருக்கிறார். இன்ஸ்பெக்டர் அனுப்பிய ஆபாச குறுந்தகவல்கள், யசஷ்வினியுடன் பேசும் ஆடியோ தற்போது சமூக வலைதளங்களில் வேகமாக பரவி வருகிறது. இன்ஸ்பெக்டர் பேசும்போது யசஷ்வினியை, யஷ் நீ என் தங்கம். பேபி என செல்லமாக பேசுவது இடம் பெற்றுள்ளது.
அதே நேரத்தில் தன் பெயரை பாப்பண்ணா என்பதை சுருக்கி பாப்பு என்று அழைக்க வேண்டும் என்று யசஷ்வினியிடம் கூறுவது, அதற்கு ஒரு இன்ஸ்பெக்டரை பாப்பு என்ற எப்படி சொல்வேன் என யசஷ்வினி கேட்க, அவ்வாறு இன்ஸ்பெக்டர் என்று சொன்னால் வீட்டுக்கு வந்து உதைப்பேன் என பாப்பண்ணா கூறுவதும் இடம் பெற்றிருக்கிறது. மேலும் யசஷ் வினியிடம் ஆபாசமாக பேசிய பாப்பண்ணா முத்தம் கொடுக்கும்படி கேட்பதும் இடம் பெற்றுள்ளது.
இந்த விவகாரம் குறித்து இதுவரை எந்த வழக்கும் பதிவு செய்யப்படவில்லை. புகார் குறித்து பரிசீலனை நடத்தி இன்ஸ்பெக்டர் பாப்பண்ணா மீது போலீஸ் கமிஷனர் சீமந்த்குமார் சிங் நடவடிக்கை எடுப்பார் என போலீஸ் அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். இன்ஸ்பெக்டர் மீது பெண் ரவுடி ஆபாச தொல்லை கொடுப்பதாக புகார் அளித்திருப்பது பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.