புவனேஷ்வர்,
பனாமா நாட்டுக்கு சொந்தமான சரக்கு கப்பல் ஒடிசாவில் இருந்து இரும்புத்தாது கனிமங்களை எடுத்துக்கொண்டு நேற்று சிங்கப்பூருக்கு புறப்பட்டது. அந்த சரக்கு கப்பலில் 20 சீனர்கள், மியானர்மர் நாட்டினர் 3 பேர், வங்காளதேசவர் ஒருவர் என மொத்தம் 24 மாலுமிகள் பயணித்தனர்.
இந்நிலையில், கப்பல் ஒடிசாவில் இருந்து 240 நாடிகல் மைல் தொலைவில் வங்காள விரிகுடா கடலில் நேற்று பயணித்துக்கொண்டிருந்தது. அப்போது எதிர்பாராத விதமாக விபத்து ஏற்பட்டு சரக்கு கப்பல் கடலில் மூழ்கத்தொடங்கியது.
இதையடுத்து கப்பலில் இருந்த மாலுமிகள் உதவிகேட்டு அவசர அழைப்பு விடுத்தனர். இதையறிந்த இந்திய கடற்படையினர் மற்றும் கடலோரக்காவல்ப்படையினர் விரைந்து சென்று மீட்புப்பணியில் ஈடுபட்டு வருகின்றனர். இதில் 2 மாலுமிகள் உயிருடன் மீட்கப்பட்டுள்ளனர்.
ஆனால், எஞ்சிய 22 மாலுமிகளின் நிலை என்ன? என்று தெரியவில்லை. அவர்களை தேடும் பணியில் கடற்படையினர் தீவிரமாக ஈடுபட்டு வருகின்றனர்.