தேசிய செய்திகள்

கப்பலில் எண்ணெய் கடத்தல்; சர்வதேச சட்டவிரோத கும்பல் நடுக்கடலில் கைது; இந்தியா அதிரடி

டிஜிட்டல் தரவுகளை ஆய்வு செய்தபோது, மலிவான எண்ணெய்யை அதிக அளவில் கடத்தி செல்வது தெரிய வந்தது.

புதுடெல்லி,

இந்திய கடலோர காவல் படையானது நவீன உபகரணங்கள், மின்னணு சாதன வசதிகளுடன் ரோந்து மற்றும் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டு வருகிறது. இந்நிலையில், வான் மற்றும் கடல் வழியே ஒருங்கிணைந்த முறையில் நடத்தப்பட்ட ரோந்து பணியின்போது, சந்தேகத்திற்குரிய வகையில் கப்பல் ஒன்று சென்று கொண்டிருப்பது தெரிய வந்தது.

சட்டவிரோத வகையில், சர்வதேச எண்ணெய் கடத்தல் கும்பல் ஒன்று கப்பலில் பயணித்து உள்ளது. அதன் டிஜிட்டல் தரவுகளை ஆய்வு செய்தபோது, மலிவான எண்ணெய்யை அதிக அளவில் கடத்தி செல்வது தெரிய வந்தது.

போர்களால் கடுமையாக பாதிக்கப்பட்ட நாடுகளில் இருந்து இதுபோன்று, எண்ணெய்யை கப்பலில் கொண்டு சென்று நடுக்கடலில், சர்வதேச நீர்வழி பகுதியில் பிற கப்பல்களுக்கு வழங்குவது தெரிய வந்தது. இதனை பல்வேறு நாடுகளை சேர்ந்த கும்பல்கள் ஒரு நெட்வொர்க் போன்று செயல்பட்டு இயக்கி வருவது தெரிய வந்துள்ளது.

நவீன மற்றும் டிஜிட்டல் முறையில் இந்த நெட்வொர்க் செயல்பட்டு வருகிறது. கடலில் கப்பல்கள் செல்லும்போது, சரக்குகளை நடுக்கடலில் பரிமாறி கொள்வது, விற்பதும் ஒருங்கிணைந்த நெட்வொர்க் முறையில் செயல்படுவதும் தெரிய வந்துள்ளது.

இதனால், இந்தியா உள்பட பல்வேறு நாடுகளுக்கான வரிகளை செலுத்த வேண்டியதில் இருந்து தப்பித்து கொள்கின்றனர். இதன்படி, பல கப்பல்கள் இதில் ஈடுபட்டு வந்துள்ளன. அவற்றில் ஒரு கப்பலை இந்தியாவுக்கு கொண்டு வர அதிகாரிகள் திட்டமிட்டு உள்ளனர். இதன்பின் தொடர்ந்து விசாரணை மேற்கொள்ளப்படும்.