தேசிய செய்திகள்

கேரளாவில் ஓணம் வார கொண்டாட்டம் ரத்து - பினராயி விஜயன் அறிவிப்பு

கேரளாவில் ஓணம் வார கொண்டாட்டம் ரத்து செய்யப்படுவதாக முதல்-மந்திரி பினராயி விஜயன் அறிவித்துள்ளார்.

திருவனந்தபுரம்,

கேரளா மாநிலம் வயநாடு மாவட்டம் முண்டக்கை, சூரல்மலை உள்ளிட்ட மலைக்கிராமங்களில் கடந்த மாதம் 30-ந்தேதி அதிகாலையில் கடும் நிலச்சரிவு ஏற்பட்டது. அங்கு பெய்த கனமழையின் காரணமாக நிலச்சரிவு ஏற்பட்டது. இந்த பேரிடரில் 400-க்கும் மேற்பட்டோர் உயிரிழந்தனர்.

இதுவரை 231 உடல்களும், 206 உடல் பாகங்களும் நிலச்சரிவு ஏற்பட்ட பகுதிகளில் இருந்து மீட்கப்பட்டுள்ளன. மேலும் 300-க்கும் மேற்பட்டோர் மாயமாகினர். நிலச்சரிவில் ஆயிரக்கணக்கானோர் வீடுகளை இழந்து நிவாரண முகாம்களில் தங்கவைக்கப்பட்டுள்ளனர்.

இந்த நிலையில், கேரளாவில் இந்த ஆண்டு ஓணம் வார கொண்டாட்டம் ரத்து செய்யப்படுவதாக அறிவிக்கப்பட்டுள்ளது. வயநாடு பேரழிவால் ஓணம் வார கொண்டாட்டத்தை மாநில அரசு ரத்து செய்துள்ளதாக கேரள முதல்-மந்திரி பினராயி விஜயன் அறிவித்துள்ளார்.