திருமலை,
திருப்பதி கோவில் உண்டியலில் நேற்று ஒருநாளில் மட்டும் பக்தர்கள் ரூ.5.46 கோடி காணிக்கை செலுத்தி உள்ளனர்.
திருப்பதி ஏழுமலையான் கோவிலில் தினமும் பல்லாயிரக்கணக்கான பக்தர்கள் வருகை தந்து சாமி தரிசனம் செய்து வருகின்றனர். விடுமுறை மற்றும் விசேஷ தினங்களில் பக்தர்களின் எண்ணிக்கை மேலும் அதிகரிக்கும். இலவச தரிசனத்தில் பல மணி நேரம் காத்திருந்து பக்தர்கள் சாமி தரிசனம் செய்கின்றனர்.
திருப்பதி ஏழுமலையான் கோவிலில் நேற்று 77 ஆயிரத்து 502 பக்தர்கள் சாமி தரிசனம் செய்தனர். 34 ஆயிரத்து 485 பக்தர்கள் தலைமுடி காணிக்கை செலுத்தினர். அன்று தேவஸ்தானம் அறிவித்த ஒருநாள் உண்டியல் காணிக்கை ரூ.5 கோடியே 46 லட்சம் ஆகும். அன்று 4 லட்சத்து 24 ஆயிரம் லட்டுகள் விற்பனையாகின. 2 லட்சத்து 50 ஆயிரம் பக்தர்களுக்கு அன்னப்பிரசாதம் வழங்கப்பட்டது.
தேதி, நேரம் குறிப்பிடப்பட்ட 'டைம் ஸ்லாட்' டோக்கன்கள் இல்லாமல் இலவச தரிசனத்தில் சென்ற பக்தர்கள் ஏழுமலையானை வழிபட சுமார் 24 மணி நேரம் காத்திருக்க வேண்டிய நிலை இருந்ததாக, கோவில் அதிகாரிகள் தெரிவித்தனர்.