காந்திநகர்,
கடந்த 1996-ம் ஆண்டு பெண் ஒருவர் தற்கொலை செய்து கொண்ட வழக்கில், அந்த பெண்ணின் கணவருக்கு கடந்த 2003-ம் ஆண்டு, மே 20-ந்தேதி வல்சாத் மாவட்ட நீதிபதி, மனைவியை கொடுமைப்படுத்தியற்காக ஒரு ஆண்டு சிறை தண்டனையும் மனைவியை தற்கொலைக்கு தூண்டியதற்காக 7 ஆண்டுகள் சிறை தண்டனையும் விதித்தார்.
இந்த தீர்ப்பை எதிர்த்து குற்றம் சாட்டப்பட்ட நபர், குஜராத் ஐகோர்ட்டில் மேல்முறையீடு செய்தார். இந்த மேல்முறையீட்டு வழக்கை நீதிபதி கீதா கோபி விசாரித்தார். அரசு தரப்பில் ஆஜரான வக்கீல், "சுமார் ஒரு வருடம் கணவனும், மனைவியும் சரிகம் பஹட்பாடா பகுதியில் வசித்து வந்தனர். இந்த சமயத்தில் குற்றம் சாட்டப்பட்ட நபர் தனது மனைவியை மன ரீதியாகவும், உடல் ரீதியாகவும் கொடுமைப்படுத்தியுள்ளார். இருவருக்கும் இடையே அடிக்கடி சண்டை ஏற்பட்டு வந்துள்ளது.
கூடுதல் வருமானம் ஈட்டுவதற்காக அவர் திருமண விழாக்களில் "பாஞ்சோ" இசைக்கருவி மீட்டியுள்ளார். இதனால் இரவு நேரங்களில் தாமதமாக வீட்டிற்கு வந்துள்ளார். இது அவரது மனைவிக்கு பிடிக்கவில்லை. இதுதொடர்பாகவும் வாக்குவாதங்கள் ஏற்பட்டுள்ளது. ஒரு நாள் அவரது மனைவி, கணவரிடம் தெரிவிக்காமல் தனது பெற்றோர் வீட்டில் இரவு தங்கியுள்ளார். இதுகுறித்து அறிந்த அவர் ஆத்திரத்தில் தனது மனைவியை அறைந்துள்ளார்.
ஒட்டுமொத்தமாக அவரது நடத்தை, அந்த பெண்ணை தற்கொலைக்கு தூண்டியுள்ளது. இதன் காரணமாக கடந்த 1996-ம் ஆண்டு அவரது மனைவி தற்கொலை செய்துகொண்டார்" என்று வாதிட்டார்.
இருப்பினும் ஆதாரங்கள் தண்டனையை உறுதிசெய்ய போதுமானதாக இல்லை என்று கூறிய ஐகோர்ட்டு நீதிபதி, சாட்சியத்தில் உள்ள முரண்பாடுகளையும் குறிப்பிட்டார். இறந்தவரின் தாய் தனது மகளை அறைந்ததாக கூறியபோதும், அந்த பெண்ணின் தந்தை அதை நேரில் பார்க்கவில்லை என்று ஒப்புக்கொண்டுள்ளார். மேலும் உடல் ரீதியான தாக்குதல் தொடர்பான முறையான புகார்கள் எதுவும் பதிவு செய்யப்படவில்லை என்று தெரிவித்தார்.
தனக்கு தெரிவிக்காமல் தனது பெற்றோர் வீட்டில் இரவு தங்கியதற்காக மனைவியை கணவர் அறைந்த சம்பவம் கொடுமையாகாது. தற்கொலைக்கு தூண்டியதாக ஒருவருக்கு தண்டனை வழங்கப்பட வேண்டுமானால், தற்கொலையுடன் நேரடியாக தொடர்புடைய, தொடர்ச்சியான மற்றும் தாங்க முடியாத கொடுமைக்கான உறுதியான சான்றுகள் இருக்க வேண்டும்.
வெறும் திருமண முரண்பாடு அல்லது தனிமைப்படுத்தப்பட்ட சம்பவங்கள், 498A (கணவர் அல்லது உறவினர்களால் கொடுமைப்படுத்தப்படுதல்) மற்றும் 306 (தற்கொலைக்குத் தூண்டுதல்) பிரிவுகளின் கீழ் தேவைப்படும் சட்டப்பூர்வ வரம்பை பூர்த்தி செய்யாது என்று கூறிய நீதிபதி, தற்கொலைக்கு தூண்டியதற்கான காரணம் நிரூபிக்கப்படவில்லை. எனவே குற்றம் சாட்டப்பட்டவருக்கு விதிக்கப்பட்ட தண்டனை ரத்து செய்யப்பட்டு, அவர் விடுவிக்கப்படுகிறார் என்று தீர்ப்பளித்தார்.