மும்பை,
மராட்டிய மாநிலத்தில் அனலாக் பன்னீர் எனப்படும் செயற்கைப் பன்னீரின் உற்பத்தி மற்றும் விற்பனைக்கு ஓராண்டு தடை விதித்து அம்மாநில அரசு உத்தரவிட்டுள்ளது.
மராட்டிய மாநிலத்தில், முதல்-மந்திரிதேவேந்திர பட்னவிஸ் தலைமையில் பா.ஜ., – சிவசேனா – தேசியவாத காங்., கூட்டணி ஆட்சி நடக்கிறது. இம்மாநில உணவு பாதுகாப்பு கமிஷனர் துக்காராம் முண்டே நேற்று வெளியிட்டுள்ள அறிவிப்பில் கூறி இருப்பதாவது:- மாநிலம் முழுதும் பெரும்பாலான உணவு விடுதிகள், ஹோட்டல்களில், வாடிக்கையாளர்களுக்கு தெரிவிக்காமல், பாலில் இருந்து தயாரிக்கப்படும் பன்னீர் எனக் கூறி, அனலாக் பன்னீரை வழங்குவதாக எங்களுக்கு தொடர்ச்சியாக புகார்கள் வருகின்றன.
இது, சட்டப்படி தண்டனைக்குரிய குற்றம். அனலாக் பன்னீரில், புரதச்சத்து மிகக் குறைவு; உடல்நலனுக்கும் கேடு. எனவே, அடுத்த ஓராண்டுக்கு அனலாக் பன்னீரை உற்பத்தி செய்யவும், பதப்படுத்தவும், தயாரிக்கவும், வினியோகிக்கவும், மொத்த மற்றும் சில்லரை விற்பனை கடைகளில் விற்கவும் ஓராண்டு தடை விதிக்கப்படுகிறது. இதை மீறுவோருக்கு விளைவுகளின் தீவிரத்தை பொறுத்து தண்டனை வழங்கப்படும். குறைந்தபட்சம், ஆறு மாத சிறை மற்றும் 1 லட்சம் ரூபாய் அபராதம் விதிக்கப்படும். மரணத்தை விளைவிக்கும் சந்தர்ப்பங்களில், ஆயுள் தண்டனை மற்றும் 10 லட்சம் ரூபாய் வரை அபராதம் விதிக்கப்படும். இவ்வாறு அதில் குறிப்பிடப்பட்டுள்ளது.
இந்நிலையில் அங்குள்ள உணவகங்கள் மற்றும் கேட்டரிங் அமைப்புகள் இந்தச் செயற்கைப் பன்னீரை நுகர்வோருக்குத் தெரியாமல் உண்மையான பன்னீர் எனப் பயன்படுத்துவது கண்டறியப்பட்டுள்ளது; உணவுப் பாதுகாப்புத் துறை நடத்திய ஆய்வில் 35 சதவீதத்திற்கும் அதிகமான மாதிரிகள் தரம் குறைந்தவை எனத் தெரியவந்துள்ளது.