டெல்லியில் உள்ள பஞ்சாப் அன்ட் சிந்து வங்கியில் அதிகாரியாக பணியாற்றி வருபவர் பெடன்ஷு சேகர் மிஸ்ரா. இவர் ஆன்லைன் விளையாட்டுகளில் அதிக ஆர்வம் கொண்டவர். பணம் செலுத்தி ஆன்லைன் விளையாட்டுகளை விளையாடுவதற்காக வங்கியின் பல்வேறு கணக்குகளில் இருந்து முறைகேடாக பணத்தை எடுத்து வந்துள்ளார். இதற்கு வங்கி ஊழியரான சைலேஷ் குமார் அவருக்கு உடைந்தையாக இருந்துள்ளார். இருவரும் சேர்ந்து 30-க்கும் மேற்பட்ட கணக்குகளில் இருந்து ரூ.55 கோடி வரை சுருட்டியுள்ளனர்.
இதனை கண்டறிந்த வங்கி ரகசிய விசாரணை நடத்தியதில் இருவரும் மோசடியில் ஈடுபட்டது அம்பலமானது. அதனை தொடர்ந்து வங்கி நிர்வாகம் இது குறித்து சி.பி.ஐ.யிடம் புகார் அளித்தது. அதன் பேரில் விசாரணை நடத்தி வந்த சி.பி.ஐ. அதிகாரிகள் இந்த வழக்கில் தற்போது சேகர் மிஸ்ரா மற்றும் சைலேஷ் குமார் மீது குற்றப்பத்திரிகை தாக்கல் செய்துள்ளனர்.