தேசிய செய்திகள்

இளம்பெண்ணுக்கு பாலியல் தொல்லை கொடுத்த ஆன்லைன் விற்பனை பிரதிநிதி - வைரல் வீடியோ

பாதிக்கப்பட்ட இளம்பெண், தனது எக்ஸ் வலைதள பக்கத்தில் புகாரை பதிவிட்டுள்ளார்.

பெங்களூரு,

கர்நாடக மாநிலம் பெங்களூரு மாரத்தஹள்ளி பகுதியில் வசிக்கும் ஒரு இளம்பெண் ஆன்லைன் விற்பனை நிறுவனம் மூலம் ஒரு பொருளை ஆர்டர் செய்திருந்தார். அந்த பொருளை கடந்த 2 நாட்களுக்கு முன்பு, அந்த நிறுவனத்தைச் சேர்ந்த விற்பனை பிரதிநிதி எடுத்து வந்து வினியோகித்தார்.

அப்போது அவர் அந்த பெண்ணின் வீட்டுக்குள் யாரும் இல்லாததை அறிந்து, அத்துமீறி உள்ளே நுழைந்துள்ளார். மேலும் கழிவறைக்கு அந்தபெண்ணை தள்ளிச்சென்று பாலியல் ரீதியாக துன்புறுத்தி உள்ளார். அதையடுத்து அந்த நபர் அங்கிருந்து தப்பிச் சென்றுவிட்டார்.

இதுபற்றி பாதிக்கப்பட்ட இளம்பெண், தனது எக்ஸ் வலைதள பக்கத்தில் புகாரை பதிவிட்டு அதை பெங்களூரு போலீசாருக்கான எக்ஸ் தள கணக்குடன் இணைத்திருந்தார். அதன்பேரில் போலீசார் இதுபற்றி விசாரணை நடத்தினர். அப்போது ஆன்லைன் நிறுவன விற்பனை பிரதிநிதி அந்த பெண்ணை பாலியல் ரீதியாக துன்புறுத்தியது தெரியவந்தது.

அதன்பேரில் மாரத்தஹள்ளி போலீசார் வழக்குப்பதிந்து அந்த நபரை கைது செய்தனர். அவரது பெயர் விஜய் மல்லிகார்ஜூன் காமத் என்பதாகும். அவரிடம் போலீசார் தொடர்ந்து விசாரித்து வருகிறார்கள். இதற்கிடையே இதுதொடர்பான வீடியோ சமூக வலைதளங்களில் வெளியாகி பரபரப்பை ஏற்படுத்தி வருகிறது.