தேசிய செய்திகள்

‘கர்நாடகத்தில் வந்தே மாதரம் பாடலின் முதல் 2 பத்திகள் மட்டுமே பாடப்படும்’ - டி.கே.சிவக்குமார்

காங்கிரஸ் கட்சியின் நிலைப்பாட்டில் தங்கள் அரசு உறுதியாக இருப்பதாக டி.கே.சிவக்குமார் தெரிவித்துள்ளார்.

பெங்களூரு,

'வந்தே மாதரம்' பாடலின் முதல் 2 பத்திகளை மட்டுமே பாடுவது என்ற காங்கிரஸ் கட்சியின் முடிவையே தனது அரசும் பின்பற்றும் என்றும், கட்சியின் நிலைப்பாட்டில் தங்கள் அரசு உறுதியாக இருப்பதாகவும் கர்நாடக முதல்-மந்திரி டி.கே. சிவகுமார் தெரிவித்துள்ளார்.

பெங்களூருவில் நடைபெற்ற தனியார் செய்தி நிறுவன நிகழ்ச்சியில் கர்நாடக முதல்-மந்திரி டி.கே.சிவக்குமார் கலந்து கொண்டார். அப்போது அவரிடம், வந்தே மாதரம் பாடலை முழுமையாக பாடுவது தொடர்பாக கேள்வி எழுப்பப்பட்டது. சமீபத்தில் சுதந்திர தினத்தின்போது நடைபெற்ற விழா ஒன்றில் வந்தே மாதரம் பாடலின் 6 பத்திகளும் முழுமையாக பாடப்பட்ட நிலையில், அது தனது கவனத்திற்கு வராமல் எடுக்கப்பட்ட முடிவு என்று டி.கே.சிவக்குமார் கூறினார்.

மேலும், அவர் கூறுகையில், “நான் என் கட்சியின் சித்தாந்தத்தில் நம்பிக்கை கொண்டுள்ளேன். நாங்கள் என்ன முடிவு செய்திருக்கிறோமோ, அதில் நான் உறுதியாக நிற்கிறேன். கட்சியின் முடிவை எனது அரசு பின்பற்றும். என் அனுமதியின்றியோ அல்லது கவர்னர் மாளிகையிலோ வந்தே மாதரம் பாடல் முழுமையாக பாடப்பட்டிருக்கலாம். ஆனால் எதிர்காலத்தில் எந்தவொரு அரசு விழாவாக இருந்தாலும், கர்நாடக மாநிலத்தில் வந்தே மாதரம் பாடலின் முதல் 2 பத்திகள் மட்டுமே பாடப்படும் என்பதில் உறுதியாக இருக்கிறோம்” என்று தெரிவித்தார்.