தேசிய செய்திகள்

ஆபரேஷன் சிந்தூர்:வீரர்களுக்கு தேசம் வணக்கம் செலுத்துகிறது - ஜனாதிபதி திரவுபதி முர்மு

ஓராண்டுக்கு முன்பு, நமது ஆயுதப் படையினர் சிந்தூர் நடவடிக்கையின் இணையற்ற வெற்றி என ஜனாதிபதி திரவுபதி முர்மு கூறியுள்ளார்.

புதுடெல்லி,

2025 ஆம் ஆண்டு ஏப்ரல் 22ஆம் தேதி ஜம்மு காஷ்மீரின் பஹல்காம் பள்ளத்தாக்கில் சுற்றுலாப் பயணிகள் மீது பயங்கரவாதிகள் திடீரென துப்பாக்கி சூடு நடத்தினர். பயங்கரவாதிகளின் இந்த தாக்குதலால் இந்தியா மட்டுமல்ல உலகமே அதிர்ச்சி அடைந்தது.

பாகிஸ்தானில் பதுங்கி இருந்த பயங்கரவாதிகள் எல்லை தாண்டி வந்து இந்த தாக்குதலை நடத்தியது உறுதி செய்யப்பட்டது. ஒட்டு மொத்த நாடே கொதித்தெழுந்தது. இந்நிலையில் இந்திய ராணுவம் 2025ஆம் ஆண்டு மே 7ஆம் தேதி அதாவது இதே நாளில் தான் பாகிஸ்தான் பயங்கரவாதிகள் மீது ஆப்ரேஷன் சிந்தூர் நடவடிக்கையை எடுத்தது. இந்தியாவின் பஹல்காம் பள்ளத்தாக்கில் நடத்தப்பட்ட தாக்குதலுக்கு பதிலடியாக ராணுவம், கடற்படை மற்றும் விமானப்படை ஆகிய மூன்று படைகளும் இணைந்து பாகிஸ்தான் ஆக்கிரமிப்பு காஷ்மீர் மற்றும் பஞ்சாப் மாகாணத்தில் பதுங்கி இருந்த 9 பயங்கரவாத முகாம்களை அழித்தன.

இதனால் இந்தியாவிற்கும் பாகிஸ்தானுக்கும் இடையே போர் ஏற்படும் அபாயம் கூட எழுந்தது. 88 மணி நேரம் நீடித்த இந்த ஆபரேஷன் உலகின் பார்வையையே இந்தியா மீது திருப்பியது. பொதுமக்களுக்கு சேதம் ஏற்படாமல் மிக துல்லியமாக பயங்கரவாதிகளின் முகாம்களும் பயங்கரவாதிகளும் அழிக்கப்பட்டனர். ஆபரேஷன் சிந்தூர் குறித்து தன்னுடைய எக்ஸ் பக்கத்தில் பதிவு செய்துள்ள பிரதமர் மோடி ஓராண்டுக்கு முன்பு நமது ஆயுதப்படையினர் ஆபரேஷன் சிந்தூர் நடவடிக்கையின் போது இணையற்ற தைரியத்தையும் துல்லியத்தையும் வெளிப்படுத்தினர் என பெருமிதம் தெரிவித்தார்.

இந்தநிலையில், பயங்கரவாதத்திற்கு எதிரான இந்தியாவின் அசைக்க முடியாத உறுதிக்கு ஆபரேஷன் சிந்தூர் தெளிவான சான்றாக விளங்குவதாக ஜனாதிபதி திரவுபதி முர்மு கூறியுள்ளார்.

இது தொடர்பாக அவர் எக்ஸ் தளத்தில் பதிவிட்டுள்ளதாவது:-

ஓராண்டுக்கு முன்பு, நமது ஆயுதப் படையினர் சிந்தூர் நடவடிக்கையின் இணையற்ற வெற்றி, நமது ஆயுதப் படைகளின் தைரியத்தையும் உறுதியையும் பிரதிபலிக்கிறது.

பஹல்காமில் நடந்த கொடூரமான தாக்குதலுக்கு, தகுந்த பதிலடி கொடுக்கப்பட்டது. பயங்கரவாதத்திற்கும், நமது இறையாண்மை மற்றும் குடிமக்களின் பாதுகாப்பிற்கு அச்சுறுத்தல் விளைவிக்கும் அனைத்து சக்திகளுக்கும் எதிராக இந்தியாவின் அசைக்க முடியாத உறுதிக்கு ஆபரேஷன் சிந்தூர் ஒரு தெளிவான சான்றாக விளங்குகிறது.

தேசத்தை அச்சுறுத்த நினைப்பவர்களுக்கு, நமது தேசம் விழிப்புடனும், ஒற்றுமையுடனும், வலிமையுடன் பதிலடி கொடுக்கத் தயாராகவும் நிற்கிறது என்பதைத் தெரிந்துகொள்ள வேண்டும். இன்று, நமது வீரர்களின் அசைக்க முடியாத வீரம், தியாகம் மற்றும் தொழில்முறை திறனுக்கு தேசம் வணக்கம் செலுத்துகிறது என அதில் பதிவிட்டுள்ளார்.