தேசிய செய்திகள்

தர்மேந்திர பிரதான் பதவி விலகக் கோரி நாடாளுமன்றத்தில் எதிர்க்கட்சி எம்.பி.க்கள் போராட்டம்

எதிர்க்கட்சி எம்.பி.க்கள் அரசுக்கு எதிராக முழக்கங்களை எழுப்பினர்.

புதுடெல்லி,

நீட் வினாத்தாள் கசிவை கண்டித்தும், மத்திய கல்வி மந்திரி தர்மேந்திர பிரதான் பதவி விலகக்கோரியும், டெல்லியில் கரப்பான்பூச்சி ஜனதா கட்சியினரும், ஏராளமான இளைஞர்களும் தொடர் போராட்டம் நடத்தி வருகின்றனர். இளைஞர்களின் போராட்டத்துக்கு ஆதரவாக நாட்டின் பல பகுதிகளிலும் மாணவர்கள் மற்றும் இளைஞர்கள் ஆங்காங்கே போராட்டம் நடத்தி வருகின்றனர்.

இந்த நிலையில், மாணவர்கள் மற்றும் இளைஞர்களுக்கு ஆதரவு தெரிவித்தும், மத்திய மந்திரி தர்மேந்திர பிரதான் பதவி விலக வேண்டும் என்ற கோரிக்கையுடனும் எதிர்க்கட்சி எம்.பி.க்கள் நாடாளுமன்ற வளாகத்தில் போராட்டம் நடத்தினர். காங்கிரஸ் தலைவர் மல்லிகார்ஜுன கார்கே மற்றும் பொதுச் செயலாளர் பிரியங்கா காந்தி ஆகியோர் தலைமையில், பல எதிர்க்கட்சி எம்.பி.க்கள் அரசுக்கு எதிராக முழக்கங்களை எழுப்பினர்.

அவர்கள் தர்மேந்திர பிரதானின் பதவி விலக வேண்டும் என்றும், தேர்வு வினாத்தாள் கசிவு விவகாரம் குறித்து நாடாளுமன்றத்தின் இரு அவைகளிலும் விவாதம் நடத்தப்பட வேண்டும் என்பதையும் வலியுறுத்தினர்.

அரசு மற்றும் கல்வி மந்திரிக்கு எதிராக முழக்கமிட்டவாறே, 'பிரதானை பதவி நீக்கம் செய்' (Barkhaast Karo Pradhan Ko) என்று எழுதப்பட்ட பதாகையையும் அவர்கள் ஏந்தியிருந்தனர். இதனால் நாடாளுமன்ற வளாகம் பரபரப்புடன் காணப்பட்டது.