புதுடெல்லி,
நாடாளுமன்றத்தின் மழைக்காலக் கூட்டத்தொடர் கடந்த 20 ஆம் தேதி கூடியது. அவை கூடியதில் இருந்தே நீட் வினாத்தாள் கசிவு மற்றும் ஜந்தர் மந்தரில் கரப்பான்பூச்சி ஜனதா கட்சியின் போராட்டத்தில் தடியடி நடத்தப்பட்டது குறித்து விவாதிக்கக் கோரி மக்களவை மற்றும் மாநிலங்களவையில் எதிர்க்கட்சிகள் அமளியில் ஈடுபட்டு வருகின்றன.
அந்த வகையில் 4-வது நாளாக இன்று காலை மக்களவை கூடியது. இதனிடையே காங்கிரஸ் எம்.பி. கே.சி.வேணுகோபால், நீட் வினாத்தாள் கசிவு விவகாரம் தொடர்பாக மக்களவையில் விவாதம் நடத்த வேண்டும் என சபாநாயகரிடம் மனு அளித்தார். இதற்கு ஆளுங்கட்சி எம்.பி.க்கள் எதிர்ப்பு தெரிவித்து கோஷம் எழுப்பினர்.
தொடர்ந்து எதிர்க்கட்சி எம்.பி.க்கள் தங்கள் கோரிக்கையை வலியுறுத்தி அமளியில் ஈடுபட்டனர். இதையடுத்து மக்களவை நண்பகல் 12 மணி வரை ஒத்திவைக்கப்படுவதாக சபாநாயகர் அறிவித்தார். இதன் பின்னர் தற்போது மக்களவை மீண்டும் கூடி நடைபெற்று வருகிறது.