கோப்பு படம் 
தேசிய செய்திகள்

தமிழ்நாட்டுக்கு காவிரியில் நீர் திறக்க எதிர்ப்பு: கர்நாடகாவில் பாஜக போராட்டம்

காவிரியில் தமிழகத்திற்கு வழங்க வேண்டிய தண்ணீரை வழங்காமல் கர்நாடகா தொடர்ந்து அடம் பிடித்து வருகிறது.

பெங்களூரு,

காவிரியில் இருந்து தமிழகத்திற்கு தண்ணீர் திறந்துவிடக்கூடாது என வலியுறுத்தி கிருஷ்ண்ராஜசாகர் அணை முன்பாக கர்நாடக பாஜகவினர் போராட்டத்தில் ஈடுபட்டனர்.

காவிரியில் நடுவர் மன்ற உத்தரவுப்படி தண்ணீர் திறக்க கர் நாடக அரசு தொடர்ந்து மறுத்து வருகிறது. ஆனால் தமிழ்நாடு அரசு தொடர்ந்து வலியுறுத்தி வருகிறது. காவிரியின் குறுக்கே கர்நாடக அரசு மேகதாது அணை கட்டவும் முயற்சி மேற்கொண்டு வருகிறது. இதற்கிடையே கடந்த 28-ந்தேதி நடந்த காவிரி ஒழுங்காற்றுக்குழு கூட்டத்தில் தமிழக அரசு தனது வாதங்களை அழுத்தமாக முன்வைத்தது.இதனைத்தொடர்ந்து 15 நாட்களுக்கு காவிரியில் வினாடிக்கு 3,500 கன அடி வீதம் அதாவது சுமார் 4½ டி.எம்.சி. தமிழ்நாட்டுக்கான தண்ணீரை பிலிகுண்டுலுவில் கர்நாடகம் திறந்து விட வேண்டும் என்று ஒழுங்காற்றுக் குழு பரிந்துரைத்தது. இதனையும் கர்நாடகம் ஏற்றுக்கொள்ளவில்லை.காவிரி மேலாண்மை ஆணையத்தில் இதுகுறித்து முறையிடுவோம் எனக் கூறியது. அதன்படி மேலாண்மை ஆணையத்தில் முறையிடப்பட்டது

சுப்ரீம் கோர்ட்டு

இந்த முறையீட்டின் அடிப்படையில் காவிரி மேலாண்மை ஆணையம் நேற்று மீண்டும் கூடியது. இதில்,கர்நாடகத்தின் வாதத்தை நிராகரித்த ஆணையம், சுப்ரீம் கோர்ட்டு உத்தரவின்படி நடந்துகொள்ள கர்நாடக அரசை வலியுறுத்தி, காவிரி ஒழுங்காற்றுக்குழு ஏற்கனவே பரிந்துரைத்தபடி 15 நாட்களுக்கு, வினாடிக்கு 3,500 கனஅடி நீர் (அதாவது சுமார் 4% டி.எம்.சி.) வழங்குதல் என்பதை உறுதி செய்யுமாறு கர்நாடகத்துக்கு உத்தரவிட்டது.

கன்னட அமைப்புகள்

இந்த உத்தரவால் கர்நாடக அரசு அதிர்ச்சி அடைந்துள்ளது. கன்னட அமைப்புகள் எதிர்ப்பு தெரிவித்துள்ளன. தமிழகத்துக்கு காவிரி நீர் திறக்க எதிர்ப்பு தெரிவித்து கே.ஆர்.எஸ். அணை அமைந்துள்ள மண்டியா மாவட்டத்தில் விவசாய சங்கத்தினர், கன்னட அமைப்புகளை சேர்ந்தவர்கள் கடந்த 28-ந்தேதி முதல் போராட்டம் நடத்தி வருகிறார்கள். 4-வது நாளாக இன்றும் மண்டியா, மைசூரு, பெங்களூரு உள்பட பல இடங்களில் விவசாயிகள், கன்னட அமைப்பினர் போராட்டம், சாலை மறியலில் ஈடுபட்டனர். இந்தநிலையில், கிருஷ்ணராஜ சாகர் அணை அருகே கர்நாடக பாஜகவும் போராட்டத்தில் ஈடுபட்டது. தமிழகத்திற்கு தண்ணீர் திறக்கக் கூடாது என வலியுறுத்தி பாஜக சார்பில் நடைபெற்ற இந்த போராட்டத்தில் முன்னாள் முதல்வர் எடியூரப்பா, சி.டி.ரவி உள்ளிடோர் பங்கேற்றனர்.