தேசிய செய்திகள்

பா.ஜனதா அதிகாரப்பூர்வ இணையதளம் ஹேக்கிங், எதிர்க்கட்சிகள் ‘ட்ரோல்’

பா.ஜனதா அதிகாரப்பூர்வ இணையதளம் ஹேக்கிங் செய்யப்பட்டதை எதிர்க்கட்சிகள் ‘ட்ரோல்’ செய்து வருகிறது.

பா.ஜனதா கட்சியின் இணையதளம் ஹேக்கிங் செய்யப்பட்டு பிரதமர் மோடியை கேலி செய்யும் வகையிலான மீம்ஸ் வீடியோ பதிவேற்றம் செய்யப்பட்டது. ஜெர்மனியில் பிரதமர் மோடி அந்நாட்டு அதிபர் ஏஞ்சலா மெர்கலுடன் கைகுலுக்க கையை நீட்டுவார். ஆனால், அதனை கண்டுகொள்ளாத மெர்கல், மோடியை இரு நாட்டின் தேசியக்கொடி வைக்கப்பட்டிருக்கும் இடத்திற்கு அழைத்து செல்வார். இந்த வீடியோ, பா.ஜனதாவின் இணையதளத்தில் மோசமான வாசகங்களுடன் இடம் பெற்றது.

வீடியோவுக்கு கீழே போஹேமியன் ராப்சோடி வீடியோவும் இடம் பெற்றது. இதனையடுத்து பா.ஜனதா இணையதளத்தின் சேவை காலை துண்டிக்கப்பட்டது. மாலைவரை இதே நிலை தொடர்கிறது. விரைவில் திரும்புவோம் என்ற தலைப்புடன், இணையதளத்தில் பராமரிப்பு பணி நடைபெறுகிறது என தெரிவிக்கப்பட்டுள்ளது. இதற்கிடையே எதிர்க்கட்சிகள் பா.ஜனதாவின் இணையதளத்தின் நிலையை பார்த்து ட்ரோல் செய்து வருகிறது.

காங்கிரஸ் கட்சியை சேர்ந்த திவ்யா ஸ்பந்தனா வெளியிட்டுள்ள டுவிட் செய்தியில், "இப்போது நீங்கள் பா.ஜனதா இணையதளத்தை பார்க்கவில்லை என்றால் மிஸ் பண்ணிவிட்டதாக உணர்வீர்கள் என குறிட்டார். ஆம் ஆத்மியின் செய்தி தொடர்பாளர் ஸ்வரப் பரத்வாஜ் வெளியிட்டுள்ள செய்தியில் மின்னணு வாக்குப்பதிவு இயந்திரங்களை ஹேக் செய்ய முடியாது என கூறிய ஐ.டி. வல்லுநர்கள் அவர்களுடைய இணையதளம் ஹேக் செய்யப்பட்டதை பார்த்துக் கொண்டு இருக்கிறார்கள். ஆனால் ஆதாரம் கேட்காதீர்கள் என பதிவிட்டுள்ளார். இணையதளம் ஹேக் செய்யப்பட்ட புகைப்படத்துடன் நெட்டிசன்கள் கேலியாக கருத்துகளை பதிவு செய்து வருகிறார்கள்.

2018-ல் ஜம்மு காஷ்மீர் பிராந்திய பா.ஜனதாவின் இணையதளம் ஹேக்கிங் செய்யப்பட்டது. கத்துவாவில் சிறுமி பாலியல் பலாத்காரம் செய்யப்பட்டதற்கு நியாயம் கோரி இணையதளம் ஹேக்கிங் செய்யப்பட்டது என்பது குறிப்பிடத்தக்கது.