நாடாளுமன்ற மழைக்கால கூட்டத்தொடரின் கடைசி நாளான இன்றும் எதிர்க்கட்சிகள் கடும் அமளியில் ஈடுபட்டன. இதனால், மக்களவை நடவடிக்கைகள் பாதிக்கப்பட்டன. அமளி தொடர்ந்து நீடித்ததால், மக்களவை தேதி குறிப்பிடாமல் ஒத்திவைக்கப்பட்டது.மழைக்கால கூட்டத்தொடர் முழுவதும் எதிர்க்கட்சிகளுக்கும் மத்திய அரசுக்கும் இடையே கடும் மோதல் போக்கு நீடித்தது. நீட் தேர்வு முறைகேடு விவகாரம், டெல்லியில் போராட்டத்தில் ஈடுபட்ட மாணவர்கள் மீது போலீசார் நடத்திய நடவடிக்கை, ராமர் கோவில் நன்கொடை பணம் திருட்டு குற்றச்சாட்டு உள்ளிட்ட பல்வேறு பிரச்சினைகளை முன்வைத்து எதிர்க்கட்சிகள் தொடர்ந்து அமளியில் ஈடுபட்டன.
இதனால் அவை நடவடிக்கைகள் பலமுறை முடங்கின. முக்கிய மசோதாக்கள் மற்றும் விவாதங்களை நடத்துவதிலும் இடையூறு ஏற்பட்டது.கூட்டத்தொடரின் இறுதி நாளிலும் எதிர்க்கட்சி உறுப்பினர்கள் கோஷங்களை எழுப்பி போராட்டத்தில் ஈடுபட்டதால் அவை நடவடிக்கைகள் சீராக நடைபெறவில்லை. இதையடுத்து சபாநாயகர் மக்களவையை தேதி குறிப்பிடாமல் ஒத்திவைத்தார். நாடாளுமன்ற மழைக்கால கூட்டத்தொடர் கடந்த ஜூலை 20 ஆம் தேதி தொடங்கியது குறிப்பிடத்தக்கது. முன்னதாக நாடாளுமன்ற வளாகத்தில் எதிர்க்கட்சி எம்பிக்கள் மத்திய அரசை கண்டித்து ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.
மாநிலங்களவையை பொறுத்தவரை அமளிக்கு இடையே நடைபெற்று வருகிறது. எதிர்க்கட்சி தலைவர் மல்லிகார்ஜுன கார்கே மாநிலங்களவையில் பேசியதாவது: நான் ஹல்த்வானியில் இருந்தபோது ராம்லீலா மைதானத்தில் பொதுக்கூட்டத்தில் பேசினேன். அந்த கூட்டத்தில் லட்சக்கணக்கான மக்கள் கலந்து கொண்டனர்.அப்போது நான் எந்த ஒரு சமூகத்தின் பெயரையோ, மதத்தின் பெயரையையோ குறிப்பிடவில்லை. அரசின் பிரச்சினைகள் குறித்து மட்டுமே பேசினேன். ஆனால், எனது பேச்சுக்குப் பிறகு பா.ஜ.க.வைச் சேர்ந்தவர்கள் அங்கு யாகம் நடத்தி, அந்த மேடையை ‘சுத்தப்படுத்தினர்’.இது தான் ஜனநாயகத்தின் வழியா? அரசியலமைப்பை நீங்கள் எப்படி பாதுகாப்பீர்கள்? நான் எதிர்க்கட்சித் தலைவர்” என்றார்.
இதற்கு பதிலளித்து பேசிய மத்திய அமைச்சர் ஜேபி நட்டா கூறியதாவது: கார்கே அவர்கள் கூறியது மிகவும் வருத்தமளிக்கிறது. இது காங்கிரஸ் கட்சிக்கு மட்டுமல்ல, நம் அனைவருக்குமே வருத்தம் அளிக்கும் விஷயம்.இதுபோன்ற செயல்களை பா.ஜ.க. ஒருபோதும் ஆதரிக்காது. நிச்சயமாக ஆதரிக்காது. இருப்பினும், இந்த விவகாரம் குறித்து நாங்கள் விசாரணை நடத்துவோம். அங்கு என்ன நடந்தது என்பது குறித்து உரிய முறையில் விசாரிக்கப்படும் என்று உறுதியளிக்கிறேன்.பா.ஜ.க. இதுபோன்ற செயல்களுக்கு ஆதரவு அளிக்கவில்லை என்பதை தெளிவாக தெரிவித்துக் கொள்கிறேன். இந்த சம்பவத்தை நான் கண்டிக்கிறேன். பா.ஜ.க. தேசிய தலைவர் இந்த விவகாரம் குறித்து விசாரிப்பார்.உங்களுடைய உணர்வுகள் புண்பட்டிருப்பது நம் அனைவருக்கும் மிகுந்த வருத்தத்தை ஏற்படுத்துகிறது” என்றார்.